திமுகவுக்கு வாக்களித்த மக்கள் தான் மாநில சுயாட்சி நாயகர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஆளுநருக்கு எதிரான நீதிமன்ற வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை, ஜவகர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த விழாவுக்கான அழைப்பிதழில், ‘மாநில சுயாட்சி நாயகர்’ என்று போட்டிருக்கிறீர்கள். அது நான் இல்லை தமிழ்நாட்டு மக்கள்தான். திமுகவுக்கு வாக்களித்தால் ஸ்டாலின் அமைக்கின்ற ஆட்சி சமூகநீதி ஆட்சியாக, சமத்துவ ஆட்சியாக இருக்கும்; மாநில சுயாட்சிக்கு அவர் உறுதியாக போராடுவார்.

இந்தியாவில் கூட்டாட்சிக் கொள்கை வெற்றி பெற இறுதிவரை வாதாடுவார் என்று நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள்தான் மாநில சுயாட்சியின் நாயகர்கள். இங்கே நிறைய மாணவர்கள் இருக்கிறீர்கள். நீங்களே யோசித்துப் பாருங்கள் சி.எம். ஆகி மக்களுக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டினால் ஆப்டர்ஆல் ஒன்றிய அரசின் ஏஜென்டாக நியமிக்கப்பட்ட டெம்பரரியாக இங்கே தங்கியிருக்கின்ற ஒரு கவர்னர் அதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியும் என்றால், மக்கள் போடுகின்ற ஓட்டுக்கு என்ன மரியாதை? எலக்ஷன் எதற்கு நடத்தவேண்டும்?.

ஆளுநர் பதவி என்பது, எந்த பயனும் இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட். உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்கள் பர்திவாலா, மகாதேவன் அடங்கிய அமர்வு அரசியலமைப்பின் வழி நின்று தெளிவான தீர்ப்பை வழங்கி, பல ஆண்டுகளாக நிலவிய ஒரு பிரச்சினைக்கு முடிவு கட்டியிருக்கிறார்கள். பூனைக்கு மணி கட்டியிருக்கிறார்கள் ‘நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசுக்கும் மதிப்பளிக்கின்ற வகையில், ஆளுநர்கள் செயல்படவேண்டும்’ என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் இப்படி ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்திருக்கிறோம்.

பிரதமரின் உரிமையை குடியரசுத் தலைவர் எடுத்துக்கொண்டால் சும்மா இருப்பார்களா? இந்தத் தீர்ப்பு வந்ததும் தாங்கிக்கொள்ள முடியாமல், ‘குடியரசு துணைத் தலைவர் சொல்கிறார் நாடாளுமன்றம் பெரிய அதிகாரங்கள் கொண்டது என்று சொல்கிறார். ஏங்க நாங்களும் அதைத்தான் சொல்கிறோம் சட்டமன்றத்துக்கு, ஆளுநர்களை விட அதிக அதிகாரம் இருக்கிறது. தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சியை, இன்னும் உயர்த்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது.

இந்தியாவில் இருக்கின்ற டாப் 100 கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் லிஸ்ட் எடுத்து பாருங்கள். ஐந்தில் ஒரு பங்கு நம்முடைய தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. நாட்டிலேயே பிஎச்டி ஸ்காலர்ஸ் தமிழ்நாட்டில்தான் அதிகம். கல்வி நிலையங்களில், சயன்டிபிக் கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். பகுத்தறிவுக்கு எதிரான முட்டாள்தனமான கட்டுக்கதைகளை, மூடநம்பிக்கைகளை பரப்புகின்ற இடமாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஒருபோதும் இருக்கக் கூடாது.

இரண்டே அஜென்டா தான் இருக்கவேண்டும், ஒன்று சயன்டிபிக் அப்ரோச், மற்றொன்று சோசியல் ஜஸ்டிஸ். இதை கற்று தருகின்ற இடமாக தான் கல்விக்கூடங்கள் இருக்கவேண்டும். இதற்கு மாறான நிகழ்ச்சிகளை நடத்துவதோ, இதற்கு எதிராக பேசுகிறவர்களை கெஸ்ட்டாக கூப்பிடுவதோ நடந்தால், இந்த அரசின் ரியாக்சன் கடுமையாக இருக்கும். ஏற்கெனவே ஒரு சம்பவத்தில் அது தெரிந்திருக்கும்.
நிறைய பேர் இப்போது “படிக்காமாலேயே பெரிய ஆள் ஆகிவிடலாம், பணம் சம்பாதிக்க படிக்க வேண்டும் என்று அவசியமில்லை யூடியூப்-ல் கூட சம்பாதிக்கலாம் இன்ஸ்டாகிராமில் சம்பாதிக்கலாம் -அந்தக் கடை போடலாம், இந்தக் கடை போடலாம் என்று டிசைன் டிசைனா ஏமாற்றுவார்கள்.

அந்த வலையில் சிக்கிவிடாதீர்கள். அவர்கள் சொல்வதெல்லாம் விதிவிலக்குகள். விதிவிலக்குகள் எப்போதும் விதியாகாது. உங்களுக்கு விருப்பமான எந்த வேலையையும், தொழிலையும் செய்யலாம். அது தவறில்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் கல்விதான் அடிப்படை மறந்துவிடாதீர்கள். படிப்பு பயனற்றது என்று யாராவது சொன்னால், அவர்களை சைலன்டாக உங்களுடைய வாழ்க்கையிலிருந்து அவாய்ட் செய்யுங்கள்.

இப்போது புதிது புதிதாக தேசிய கல்விக் கொள்கை, விஸ்வகர்மா திட்டம் என்று திட்டங்களை கொண்டு வருகிறார்கள். மற்றொரு பக்கம், சோசியல் மீடியா மூலமாக தவறான அறிவுரைகள், திசைதிருப்பல்கள், மறுபக்கம், மாணவர்களிடம் சாதிய உணர்வை தூண்டுவது என்று பல வகையில் சதி நடைபெறுகிறது. உங்கள் ரோல் மாடலை சோஷியல் மீடியாவில் தேடாதீர்கள். சோஷியல் மீடியா என்பது, பொழுதுபோக்குக்கான ஒரு இடம் அது உங்களுடைய திறனை மட்டுப்படுத்துவதாக இருக்கக் கூடாது இதை மீறி படித்து நீங்கள் முன்னேறவேண்டும்.

ஏற்கெனவே ஏஐ, குவாண்டம் கம்யூட்டிங் போன்ற துறைகளில் நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள்.  இதற்குக் காரணம், கல்வியில் நம்முடைய தொலைநோக்குப் பார்வை, இதே வேகத்துடன், அடுத்த நூற்றாண்டுக்கு தேவையான கல்வியை நம்முடைய மாணவர்களுக்கு தர கல்வியாளர்கள் உறுதியேற்கவேண்டும். நமக்கான உரிமைகளை மீட்டு, உங்களைப் படிக்க வைப்பது அரசின் கடமை உங்களுக்கு நல்ல கல்வியை வழங்கி, அறிவார்ந்தவர்களாக உயர்த்துவது கல்வியாளர்களின் கடமை நாங்கள் உருவாக்கித் தருகின்ற வாய்ப்புகளையும், கல்வியையும் பயன்படுத்தி, வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி, உங்கள் குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டியது, மாணவர்களாகிய உங்கள் கடமை.

இந்த கடமைகளை நிறைவேற்ற இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், திராவிட மாடல் அரசும் என்றைக்கும் துணை நிற்கும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். அமைச்சர் கோவி.செழியன் முன்னிலை வகித்தார். ஆர்.எம்.கே. கல்வி குழுமங்களின் நிறுவனத் தலைவரும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.எஸ்.முனிரத்தினம் வரவேற்புரையாற்றினார்.

விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், பாரத் பல்கலைக்கழக நிறுவனர் எஸ்.ஜெகத்ரட்சகன், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன் உள்பட பலர் பாராட்டி பேசினர். இந்நிகழ்ச்சியில் எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள், பொருளாளர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தோழமை இயக்கத்தின் தலைவர்கள் செல்வப்பெருந்தகை, சண்முகம், முத்தரசன், திருமாவளவன், காதர் மொஹிதீன்,

கல்வியாளர்கள் முனிரத்தினம், ஜி.விஸ்வநாதன், முன்னாள் நீதிபதி அக்பர் அலி, அருட்தந்தை அருண், டாக்டர் நாராயணசாமி, ஹரி கே.தியாகராஜன், டாக்டர் நந்தினி ரங்கசாமி, முனைவர்கள் ஜி.ரவி, ஆறுமுகம், ராஜேந்திரன், மன்னர் ஜவஹர், திருவாசகம் பிரின்ஸ் கஜேந்திரன், எ.வ.குமரன், ஸ்ரீராம், மகேந்திரன், மலர்விழி, பீட்டர், சாய் பிரகாஷ் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post திமுகவுக்கு வாக்களித்த மக்கள் தான் மாநில சுயாட்சி நாயகர்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: