பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை ராமதாஸ் நீக்கிய நிலையில் அன்புமணி அதிரடி..!!

சென்னை: பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை ராமதாஸ் நீக்கிய நிலையில் அன்புமணி அதிரடி உத்தரவிட்டுள்ளார். பாமக புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவரான அன்புமணிக்கும் வெடித்த மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் மாமல்லபுரம் வன்னிய இளைஞர் மாநாடு முடிந்தவுடன் தனது பலத்தை கட்சியினருக்கு நிரூபிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தி வந்தார். மாவட்ட செயலாளர், மகளிர், இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் பிசுபிசுத்த நிலையில், வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம் ராமதாஸுக்கு கைகொடுத்தது.

அதை தொடர்ந்து நடைபெற்ற சமூக நீதிப் பேரவை வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் ஆதரவும் அதிகளவில் கிடைத்ததால் ராமதாஸ் உற்சாகம் அடைந்தார். ராமதாஸ் நடத்திய எந்த கூட்டத்திலும் செயல் தலைவர் அன்புமணி கலந்துகொள்ளாமல் தொடர்ந்து புறக்கணித்து வந்தார். கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி இருவரையும் சமாதானப்படுத்த எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலே முடிந்தது. இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், அக்கட்சியின் தலைவரும், தனது மகனுமான அன்புமணி மீது அடுக்கடுக்காய் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது பாமகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில், சென்னை சோழிங்கநல்லூரில் தனியார் திருமண மண்டபத்தில் 3 நாட்களுக்கு அன்புமணி பாமக நிர்வாகிகளை சந்திக்கிறார். இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட 23 மாவட்டச் செயலாளர்களில் 22 மாவட்டச் செயலாளர்கள் வருகை தந்துள்ளனர். இந்த கூட்டத்தில் பா.ம.க. பொருளாளர் திலகபாமா பங்கேற்றுள்ளார். இந்நிலையில் திலகபாமா பா.ம.க. பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திலகபாமாவுக்கு பதிலாக திருப்பூர் சையத் மன்சூர் பா.ம.க. பொருளாளராக நியமிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பா.ம.க. கட்சி நிதியை வங்கியில் இருந்து சத்தியபாமா கையெழுத்து போட்டால்தான் எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. எனவே, முன்கூட்டியே சுதாரித்துக் கொண்டு ராமதாஸ் அவரை பொருளாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். அதே வேளையில், பா.ம.க.வில் பொருளாளராக திலகபாமாவே நீடிப்பார் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களின் சொத்து தனிப்பட்ட நபரின் சொத்து அல்ல. தொண்டர்கள் இல்லாமல் பாமக கிடையாது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆலோசனை கூட்டமே இன்று நடக்கிறது. பாமகவில் அடிமட்ட தொண்டனாக செயல்படுவேன், பொறுப்புகள் வரும் போகும். நமக்குள் எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. எந்த கேள்விகள் கேட்டாலும் நான் பதிலளிப்பேன். விரைவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன். பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

The post பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை ராமதாஸ் நீக்கிய நிலையில் அன்புமணி அதிரடி..!! appeared first on Dinakaran.

Related Stories: