நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும், சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டம் – மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களின் குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர்.
அதிலும் குறிப்பாக தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் பயணிகளின் கூட்டம் மேலும் அதிகமாக காணப்படுகின்றன. தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிறைவு விழாவை எட்டியுள்ளது.
கோடை விழா தொடக்கத்தின் முதலே சுற்றுலா பயணிகள் கூட்டம் தினமும் அதிகரித்துள்ளது. இருந்த போதிலும் நீலகிரி மாவட்டத்தில் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டதால் பல்வேறு பூங்காக்கள் அடைக்கப்பட்டாலும், சாலைகள், காட்டேஜ்கள், ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மாவட்டத்தில் முதல் முறையாக இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ள குன்னூர் காட்டேரி பூங்காவில் முதல் முறையாக மலை பயிர்கள் கண்காட்சி இன்று துவங்குவதால், நேற்று காலை முதலே காட்டேரி பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.
குறிப்பாக கோடை விழாவை முன்னிட்டு காய்கறி கண்காட்சி, மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சிகள் நிறைவடைந்த நிலையில் இறுதி நிகழ்ச்சியான மலைப்பயிர்கள் கண்காட்சி இன்று காலை 10.30 மணிக்கு துவங்கவுள்ளது. இதற்கான பணிகள் பூங்காவில் தீவிரமாக நடந்து வருகிறது.
இம்முறை கிராம புற வாழ்க்கைகளை எடுத்துரைக்கும் விதமாக மலை பயிர்களால் பல்வேறு வடிவங்கள் பூங்கா முழுவதும் வைக்கப்பட உள்ளன. தேயிலை, காபி, இளநீர், பாக்கு, பனை, வெற்றிலை, கொக்கோ, முந்திரி, எண்ணெய் பனை உட்பட 10 த்திற்கும் மேற்பட்ட மலை பயிர்களை கொண்டு வடிவங்களை காட்சி படுத்த திட்டமிட்டுள்ளனர்.
வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள், வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜுன் 1-ம் தேதி பரிசளிப்பு நிகழ்ச்சியுடன் கோடை விழா நிறைவு பெறுகிறது.
The post குன்னூர் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் கண்காட்சி இன்று துவங்குகிறது appeared first on Dinakaran.