சரக்கு ரயிலில் பெட்ரோல் கசிவு: விபத்து தவிர்ப்பு

சோழவந்தான்: மதுரை அருகே கப்பலூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு தர்மபுரி பகுதியில் இருந்து பெட்ரோல் ஏற்றிய 34 டேங்கர்களுடன் சரக்கு ரயில் நேற்று வந்தது. வழக்கமாக காஸ், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளை ஏற்றி வரும் சரக்கு ரயில்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கசிவு ஏதும் உள்ளதா என ரயில்வே ஊழியர்கள் சோதனையிடுவது வழக்கம். இதன்படி நேற்று சோழவந்தான் ரயில் நிலையத்தில் நிறுத்தி, அந்த சரக்கு ரயிலின் டேங்கர்களை ஊழியர்கள் சோதனையிட்டனர்.

அப்போது பின் பகுதியில் சுமார் 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய 31வது டேங்கரில் பெட்ரோலை வெளியேற்றும் பைப் வால்வு பகுதியில் பெட்ரோல் கசிந்துள்ளது. இது குறித்து உடனடியாக மதுரை பராமரிப்பு பிரிவினருக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ரயில்வே பராமரிப்பு ஊழியர்கள் விரைந்து வந்து பெட்ரோல் கசிவை அடைத்து சரி செய்தனர். அதன் பின்னர் சுமார் 2 மணி நேரம் கழித்து சோழவந்தானிலிருந்து ரயில் கிளம்பியது. பெட்ரோல் கசிவினை கண்டறிந்து ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

The post சரக்கு ரயிலில் பெட்ரோல் கசிவு: விபத்து தவிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: