ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் திமுக கூட்டணிக்கு 159, அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 என்ற அளவில் எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. இதனால், திமுகவுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமுகவுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் கிடைக்கும். தற்போது, திமுகவில் அப்துல்லா, வில்சன், சண்முகம், வைகோ (மதிமுக) ஆகியோரும், அதிமுக சார்பில் சந்திரசேகரன் மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாமக தலைவர் அன்புமணி பதவிக்காலம் வருகிற ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகின்றன.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுபவர்கள் மே 2ம் தேதி முதல் மே 9ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், 10ம் தேதி வேட்பு மனு பரிசீலனை, 12ம் தேதி வரை வாபஸ் வாங்கலாம். மே 19ம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஜூன் 19ல் நடைபெறும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 4 இடங்களில், 3 இடங்களுக்கு திமுக வேட்பாளர்களும் மற்றும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு 1 இடமும் ஒதுக்கப்படுகிறது. அதன்படி, திமுக வேட்பாளர்களாக பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் அறிவித்தபடி திமுக சார்பில் ஏற்கனவே மாநிலங்களவை எம்பியாக இருந்த பி.வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக சார்பில் ஒதுக்கப்பட்ட ஒரு இடத்துக்கு நடிகர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று அக்கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில், 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போது திமுகவுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025ம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், வருகிற ஜூன் 19ம் தேதி நடைபெற இருக்கும் 6 தமிழக மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக, தலைவர் கமல்ஹாசனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு, செயற்குழு ஏகமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.
அதன்படி திமுக சார்பில் ஒதுக்கப்பட்ட மாநிலங்களவைக்கான ஒரு இடத்தில் கமல்ஹாசன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.அதேநேரம், ஏற்கனவே கடந்த மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு, தற்போது வருகிற ஜூலை 24ம் தேதியுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் எம்பி பதவிக்காலம் முடிவடைகிறது. அவருக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை.
* மூத்த வழக்கறிஞர் வில்சன்
இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும், தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவிடத்தை மெரினாவில் அமைக்க சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 முதல் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். தற்போது 2வது முறையாக மாநிலங்களவை எம்பி பதவி திமுக சார்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
* எஸ்.ஆர்.சிவலிங்கம்
திமுகவின் நீண்டகால களப்பணியாளரான எஸ்.ஆர்.சிவலிங்கம், திமுகவின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். எஸ்.ஆர்.சிவலிங்கம் 1989 மற்றும் 1996 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
* கவிஞர் சல்மா
சல்மா என்கிற ரொக்கையா மாலிக், எளிய இஸ்லாமிய குடும்பத்தில் இருந்து வந்த பெண்மணி. திருச்சி மாவட்டம் பொன்னாம்பட்டி பேரூராட்சி தலைவராக பணியாற்றிய சல்மா, 2006ல் மருங்காபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தமிழ்நாடு சமூக நல வாரிய தலைவராக பணியாற்றியுள்ளார். கவிதை, நாவல் என பல்வேறு தளங்களில் செயல்பட்டு வரும் சல்மாவின் படைப்புகள் அர்மீனியன் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாக திமுகவில் பணியாற்றி வருகிறார்.
* திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர், கவிஞர் மற்றும் எழுத்தாளர், திமுகவில் நீண்டகால பணியாற்றியவர் என்ற என்ற அடிப்படையில் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்தவர், இஸ்லாமியர், பெண் என வெவ்வேறு சமூகத்தில் இருந்து வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* அதிமுகவில் குழப்பம்
அதிமுக கூட்டணியில் உள்ள பாமக தலைவர் அன்புமணியின் பதவிக்காலமும் ஜூலை 24ம் தேதியுடன் முடிகிறது. கடந்த மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணியில் பாமக போட்டியிட்டது. அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் முயற்சி செய்தனர். ஆனால், அதிமுக கூட்டணியில் சேராமல் ஒதுங்கிக் கொண்டது.
இதனால் இந்த முறை பாமக மூத்த தலைவர் ஜி.கே.மணி சில நாட்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அன்புமணிக்கு எம்பி சீட் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் தேமுதிகவுக்கு ஒரு இடத்தை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் அப்படி எதையும் வாக்குறுதி அளிக்கவில்லை என்று எடப்பாடி மறுத்து விட்டார்.
இதனால் தேமுதிகவும் எம்பி பதவியை எதிர்நோக்கியுள்ளது தெளிவாகியுள்ளது. அதிமுகவிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எம்பி பதவியை எதிர்பார்த்துள்ளார். இதனால் மேலும் தென் மாவட்டங்களில் உள்ள மெஜாரிட்டி சமூகங்களான முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர், நாடார் சமுதாயங்களுக்கு ஒரு எம்பி பதவியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இதனால் அதிமுக சார்பில் எம்பி சீட் அறிவிப்பதில் எடப்பாடி பழனிசாமி கடும் குழப்பத்தில் உள்ளார்.
The post மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: கமல்ஹாசனுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு, வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு appeared first on Dinakaran.