முறையற்ற போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை

சென்னை: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அங்கன்வாடி ஊழியர்களுக்கான கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து எவ்வித முன்னறிவிப்புமின்றி நேற்று முதல் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஏழை, எளிய குழந்தைகளுக்கு மதிய உணவு, முட்டை, சத்துமாவு உள்ளிட்ட ஊட்டச்சத்து வழங்காமல் வேலையை புறக்கணிக்கும் செயல் குழந்தைகள் மைய பயனாளிகளை பாதிக்கக் கூடியதாக உள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது. 30.04.2025ம் நாள் வெளியிட்ட அரசாணையின்படி, மே மாதத்தில் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் குழந்தைகள் மையங்களுக்கு மே 11ம் ேததி முதல் 25ம் தேதி முடிய 15 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்பு போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும்.

உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி 300 நாட்களுக்கு குறையாமல் குழந்தைகள் மையப் பயனாளிகளுக்கு உணவு வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கன்வாடி பணியாளர்களின் தொடர் கோரிக்கையினை ஏற்ற இந்த அரசு 2022ம் ஆண்டு முதல் மே மாதம் சம்பளத்துடன் கூடிய கோடை விடுமுறை அறிவித்து, கடந்த 3 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. மேலும், உணவு பாதுகாப்பு சட்டத்தின் சரத்துகளை உறுதி செய்திடும் பொருட்டு மேற்கண்ட விடுமுறை நாட்களுக்கான சத்து மாவினை முன்கூட்டியே முன் பருவ கல்வி பயிலும் குழந்தைகளுக்கு மே மாதத்தின் ஆரம்பத்திலேயே வழங்கவும் ஆணை வழங்கியுள்ளது.

குழந்தைகள் மைய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு வீட்டுக்கு எடுத்து சென்று உண்ணும் வகையிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்டு, குழந்தைகளின் நலனுக்கு எதிராக செயல்படும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினை சார்ந்த ஊழியர்கள் அனைவரும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். மே 2ம் தேதி முதல் எந்தெந்த குழந்தைகள் மையம் மூடப்பட்டுள்ளது என்ற விவரங்கள் பெறப்பட்டு வருகிறது. முறையற்ற போராட்டங்களில் ஈடுபடும் குழந்தைகள் மைய பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கையை அரடு எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post முறையற்ற போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: