திருவாரூர்: திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழாவானது அடுத்த மாதம் 23, 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறுவதையொட்டி தெப்பம் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் துவங்கியுள்ளன. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் பூங்கோயில் என்று அழைக்கப்பட்டு வரும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும்,உற்ச்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர்.
கோயில் 5 வேலி,குளம் 5 வேலி,ஒடை 5 வேலி நிலபரப்பில் அமையப்பெற்றது என்ற சிறப்பினை கொண்ட இக்கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும். கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் இருந்து வரும் கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம்.
இந்நிலையில் நடப்பாண்டில் பங்குனி உத்திர விழா துவக்கத்திற்காக மஹாதுவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றும் நிகழ்ச்சியானது கடந்த மாதம் 15ந் தேதி நடைபெற்ற நிலையில் பின்னர் கடந்த 7ந் தேதி ஆழித்தேரோட்ட விழாவானது நடைபெற்றது. மேலும் தெப்ப திருவிழாவானது நாள் ஒன்றுக்கு இரவு 3 சுற்றுகள் வீதம் இரவு 7 மணியளவில் துவங்கி மறுநாள் காலை 6 மணி வரையில் கண்ணை ஜொலிக்கும் மின்னொளியில் நடைபெறுவது வழக்கம்.
மேலும் இரும்பு பேரல்கள், மூங்கில் மற்றும் பலகை கொண்டு தெப்பம் உருவாக்கப்படும் நிலையில் இதற்காக 432 டின் பேரல்களில் ஒரு அடுக்குக்கு 216 பேரல்கள் வீதம் 2 அடுக்குகளாக 7 அடி உயரத்திலும் 2 ஆயிரத்து 500 சதுர அடி அகலத்திலும் தெப்பம் உருவாக்கப்பட்டு இந்த தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம்.
நடப்பாண்டில் இந்த தெப்ப திருவிழாவானது அடுத்த மாதம் (மே) 23, 24 மற்றும் 25 தேதிகளில் தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளதையடுத்து தெப்பம் அமைப்பதற்கு குறைந்தபட்சம் 25 நாட்களுக்கு மேல் தேவைப்படும் என்பதால் இதற்கான முன்னேற்பாடு பணிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் உள்துறை கட்டளை பரம்பரை அறங்காவலர் ராம்தியாகராஜன், இணை ஆணையர் குமரேசன், உதவி ஆணையர்கள் சொரிமுத்து மற்றும் ராணி, செயல் அலுவலர் கவியரசு மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
The post திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் 3 நாட்கள் தெப்பத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: 2,500 சதுர அடி பரப்பில் உருவாகும் தெப்பம் appeared first on Dinakaran.