ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்: பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித் குமார் கண்டனம்

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்ற பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இத்தாக்குதலுக்கு காரணமானவர்களும், சதித்திட்டம் தீட்டியவர்களும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கூறும் பாகிஸ்தான், எல்லையில் கடந்த 4 நாட்களாக இரவில் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதனிடையே நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் அஷ்வின், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட 71 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று வழங்கினார். இதனைத்தொடர்ந்து, ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு நடிகர் அஜித் குமார் அளித்த பேட்டியில், ”பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை எண்ணி நான் வருந்துகிறேன். இந்த விவகாரத்தில் அரசு தன்னால் முடிந்ததை நிச்சயம் செய்யும் என்று நம்புகிறேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன்.

ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். டெல்லியில் ஏராளமான பாதுகாப்பு படை வீரர்களை நான் கண்டிருக்கிறேன். எல்லையில் உள்ள நம் ராணுவ வீரர்களால், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். இந்த சூழலில், சாதி மத பேதமின்றி நல்லிணக்கமாக எப்படி வாழ்வது என்பதை நாம் கற்றுக் கொள்ளவேண்டும். நமக்குள் எந்த மோதலும் இருக்க கூடாது. அமைதியாகவும், ஒற்றுமையாகவும் நாம் வாழ வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

The post ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்: பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் அஜித் குமார் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: