மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பை மீறி தமிழ்நாடு ஆழ்கடல் பகுதியில் எரிவாயு எடுக்க ஒஎன்ஜிசிக்கு ஒன்றிய அரசு அனுமதி: கடல் வளத்துக்கு பாதிப்பு ஏற்படும் என அச்சம்

சென்னை: கடும் எதிர்ப்பையும் மீறி குமரி மற்றும் சென்னை அருகே ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஒ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஒன்றிய அரசின் எரிசக்தி இயக்குனரகம் சார்பாக எண்ணெய் மற்றும்எரிவாயு எடுப்பதற்கான அனுமதி கடந்த ஜனவரி 2024ல் 9வது சுற்று ஏலம் விடப்பட்டது. இதில் தமிழக ஆழ்கடல் பகுதியில் 4 பகுதிகள் உட்பட நாடு முழுவதும் 28 பகுதியில் 1,36,596 சதுர கிலோ மீட்டர் ஏலம் விடப்பட்டது. இதில் தமிழகத்தின் தென் முனையில் கன்னியாகுமரிக்கு அருகே உள்ள ஆழ்கடலில் 3 பகுதிகளும் மற்றும் சென்னைக்கு அருகே ஒரு பகுதியும் அமைந்துள்ளது. குமரி அருகே முதல் பகுதியில் 9515 ச.கி, 2 ஆவது பகுதியில் 9845 ச.கி, 3 ஆவது பகுதியில் 7795 ச.கி மற்றும் சென்னைக்கு அருகே ஆழ்கடலில் 5330 ச.கி என மொத்தம் 32,485 சதுர கிலோமீட்டர் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஒற்றை அனுமதிமுறையில் ஏலம்
விடப்பட்டது.

இதில், தமிழகத்திற்காக ஒப்பந்த புள்ளியை பெற ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. தற்போது ஓஎன்ஜிசி நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது. தென் தமிழகத்தின் கன்னியாகுமரி ஆழ்கடல் பகுதியில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே ஆழ்கடலில் ஒரு இடத்திலும் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. இது தவிர நாடு முழுவதும் 28 வட்டாரங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒஎன்ஜிசிக்கு அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளில் மன்னார் வளைகுடா உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். பல்லுயிர் பெருக்கத்திற்கு பெயர் பெற்ற இந்த கடல் பகுதியில் ஆழ்கடல் எரிவாயு ஆய்வு மற்றும் கடலடி சுரங்கத் திட்டங்களுக்கு அனுமதியளித்ததை கண்டித்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி கன்னியாகுமரி மாவட்ட மீனவர் சங்கங்கள் போராட்டங்களை நடத்தின. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மீனவ சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் உள்ளூர் மக்களின் நலன்களை பாதுகாக்க ஒன்றிய அரசு மற்றும் ஓஎன்ஜிசி வெளிப்படையான மற்றும் பொறுப்பான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்.

இல்லையெனில், இது மேலும் போராட்டங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் வழிவகுக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் போராட்டங்களை மீறி தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2023 நவம்பரில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி சுற்றுச்சூழல் அனுமதி கோரியபோது, சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல், கேரளாவின் கொல்லம் பகுதியில் ஆழ்கடல் சுரங்கத் திட்டங்களுக்கு எதிராக மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த முறையில் போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

 

The post மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பை மீறி தமிழ்நாடு ஆழ்கடல் பகுதியில் எரிவாயு எடுக்க ஒஎன்ஜிசிக்கு ஒன்றிய அரசு அனுமதி: கடல் வளத்துக்கு பாதிப்பு ஏற்படும் என அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: