ஊட்டி, மே 22: குன்னூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு ஆண்டிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. புதிதாக கட்டிடம் கட்டும் வரை அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளியில் கல்லூரி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலை கல்லூரியில் நீலகிரியை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மட்டுமில்லாமல் மற்ற சமவெளி பகுதிகளான கோவை, ஈரோடு, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் என சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் பயின்று வருகின்றனர். இதில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது இக்கல்லூரியில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி சம்பந்தமான படிப்புகள் உள்ளன. இதேபோல் கூடலூரிலும் அரசு கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் கூடலூர், பந்தலூர் பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை பெரும்பாலும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், பழங்குடி மக்களின் குழந்தைகள் முதல் தலைமுறை மாணவர்களாக கல்வி கற்கின்றனர். அரசு கல்லூரி என்பதால் அரசின் திட்டங்களை பெற்று எவ்வித கல்வி கட்டணமுமின்றி உயர்தர கல்வியை பெற்று வருகின்றனர். மலை மாவட்ட தலைநகரமான ஊட்டி நகரில் இருந்து கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர், எடக்காடு, கிண்ணக்கொரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 முதல் அதிகபட்சமாக 60 கிமீ., தொலைவில் அமைந்துள்ளன.
வனவிலங்குகள் தொல்லை, நாள்தோறும் படிப்பிற்காக பயன்படுத்தும் பல மணி நேரங்களை பயணத்திலேயே செலவிட்டு ஊட்டியில் உள்ள கல்லூரிக்கு வந்து படித்து செல்கின்றனர். இதனால் பல மணி நேர பயணத்தால் ஏற்படும் சோர்வால் வீட்டிற்கு வந்தவுடன் மாணவ, மாணவியர்கள் படிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக தங்கும் விடுதி கிடைக்காத பட்சத்தில் தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் சென்று படிக்க வேண்டிய சூழலும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு குன்னூர் பகுதியில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினும் வலியுறுத்தி வந்தனர். குன்னூர் எம்எல்ஏவும், தமிழக அரசு தலைமை கொறடாவுமான ராமசந்திரனும் குரல் கொடுத்து வந்தார்.
இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் நடத்த தமிழக பட்ஜெட் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் குன்னூர் உட்பட 10 இடங்களில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு குன்னூர் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் குன்னூரில் நடப்பு 2025-26ம் கல்வியாண்டிலேயே கல்லூரி துவக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர் மற்றும் குன்னூர் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 2472 இளங்கலை முதலாமாண்டு இடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியிருப்பதாவது, ஊட்டி அரசு கலை கல்லூரியில் 1142, கூடலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 1060 மற்றும் குன்னூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 270 இளநிலை முதலாமாண்டு இடங்கள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் 2025-26ம் ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வரும் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரிகளில் உள்ள மாணவர் சேர்க்கை உதவி மையங்களை அணுகலாம்.
ஒரு மாணவருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவு கட்டணம் ரூ.2 ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. பதிவு கட்டணம் ரூ.2 மட்டும்.
மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரி கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் 5 மணி வரை 044-24343106, 24342911 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு தலைமை கொறடாவுமான ராமசந்திரன் கூறுகையில், ‘கடந்த பட்ஜெட் கூட்டத்தில் குன்னூர் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். குன்னூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறி உள்ளது.
புதிதாக கல்லூரி அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3க்கும் மேற்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தகுதியான இடம் இறுதி செய்யப்படும். கண்டிப்பாக குன்னூர் பகுதியில் தான் அமையும். நடப்பு கல்வி ஆண்டிலேயே குன்னூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. புதிதாக கல்லூரி கட்டிடம் கட்டும் வரை தற்காலிகமாக குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி கட்டிடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.
The post நடப்பு கல்வி ஆண்டிலேயே குன்னூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்கியது appeared first on Dinakaran.