ஆள் கடத்தல் வழக்கில் வாகனத்தை விடுவிக்க ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது

நெல்லை: ஆள் கடத்தல் வழக்கில் சிக்கிய வாகனத்தை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற கடையம் பெண் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம், பணகுடியை சேர்ந்தவர் செல்வக்குமார், விவசாயி. இவர் மீது தென்காசி மாவட்டம் கடையம் போலீஸ் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் செல்வக்குமார், கடையம் போலீஸ் நிலையத்தில் தினமும் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி கையெழுத்திட அவர் வந்த போது இன்ஸ்பெக்டரை சந்திக்குமாறு போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர் இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதாவை வழக்கு தொடர்பாக சந்தித்தார். அப்போது அவரிடம் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வக்குமார் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், செல்வக்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை கொடுத்தனர். அதனை இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதாவிடம் செல்வக்குமார் நேற்று கொடுத்த போது அங்கு மறைந்திருந்த தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பெண் இன்ஸ்பெக்டரை கைது செய்தனர்.

The post ஆள் கடத்தல் வழக்கில் வாகனத்தை விடுவிக்க ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது appeared first on Dinakaran.

Related Stories: