விஷம் கொடுத்து 2 மகன்களை கொன்று தம்பதி தற்கொலை: ஆந்திராவில் யுகாதி நாளில் சோகம்

திருமலை: ஆந்திராவில் யுகாதி நாளில் விஷம் கொடுத்து 2 மகன்களை கொன்று தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம், மடகசிரா நகரில் உள்ள காந்தி பஜாரில் வசிப்பவர் கிருஷ்ணாச்சாரி(40). இவரது மனைவி சரளா(34). இவர்களது மகன்கள் சந்தோஷ்(10), புவனேஷ்(8). கிருஷ்ணாச்சாரி தங்க நகைகள் செய்யும் பணி புரிந்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் தெலுங்கு வருடப்பிறப்பான நேற்று காலை, கிருஷ்ணாச்சாரிக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது உறவினர்கள் போன் செய்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாக போன் செய்தும் யாரும் எடுக்கவில்லையாம். இதனால் அவர்கள் உடனடியாக காந்தி பஜாரில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தனர். உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்த கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்கவில்லை. இதனால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது 2 மகன்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, கிருஷ்ணாச்சாரி மற்றும் மனைவி சரளா ஆகியோரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மடகசீரா நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சடலமாக இருந்த நான்கு பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 2 மகன்களை கொன்று தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். யுகாதி நாளில் இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post விஷம் கொடுத்து 2 மகன்களை கொன்று தம்பதி தற்கொலை: ஆந்திராவில் யுகாதி நாளில் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: