நாடு திரும்ப விரும்பும் ஈழத் தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை: இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அறிவிப்பு

யாழ்ப்பாணம்: இந்தியாவில் இருந்து இலங்கை திரும்ப விரும்பும் ஈழத் தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார். அந்நாட்டில் 80களில் உள்நாட்டு போர் தொடங்கிய போது அந்நாட்டு ராணுவம் மற்றும் சிங்களர்களால் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர். இதனால் இலங்கையில் இருந்து அகதிகளாக உலகம் முழுவதும் தமிழ் மக்கள் புலம்பெற துவங்கினர். கடந்த 1983ம் ஆண்டு முதல் தமிழகத்துக்கு 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கை தமிழர்கள் வந்துள்ளனர். இதில் அகதிகளுக்கான ஐக்கிய நாடு உயரணையாம், மத்திய மற்றும் மாநில அரசு மூலமாக சுமார் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் இலங்கைக்கு திரும்பி சென்றுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 108 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 60 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். மேலும், 40 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வெளியே காவல் நிலையங்களில் பதிவு செய்து வசித்து வருகின்றனர். ஒடிசாவில் மல்கன்கிரியில் உள்ள அகதிகள் முகாமில் 60 இலங்கை தமிழர்கள் தங்கி உள்ளனர். மேலும், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் 2022 மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்த 300க்கும் மேற்பட்டோர் அகதிகளாக மண்டபத்தில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியாவில் அகதிகளாக உள்ள ஈழ தமிழர்களை தாயகத்திற்கு அழைத்து வருவது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்பித்து பேசிய அவர்; தற்போது தமிழகத்தில் உள்ளவர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினார். அவர்களை வலுக்கட்டாயமாக நாட்டுக்கு அழைத்து வர முடியாது என்ற அவர், வர விரும்புவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார். நாடு திரும்புவதற்கான உதவிகளை வழங்குவதுடன், அவர்கள் நாடு திரும்புவது தொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்படும் என்றார்.

The post நாடு திரும்ப விரும்பும் ஈழத் தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை: இலங்கை வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: