அமெரிக்காவையும், இஸ்ரேலையும் சும்மா இருக்க சொல்லுங்க… கச்சா எண்ணெய் 200 டாலர் உயரும் பரவாயில்லையா..? வளைகுடா நாடுகளுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை

தெஹ்ரான்: வளைகுடா நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (ஐ.ஆர்.ஜி.சி) அமைப்பு, உலக எரிசக்தி சந்தையையே முடக்கும் வகையில் அதிரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இது தொடர்பாக நேற்று ஈரான் அரசு தொலைக்காட்சியில் பேசிய அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இப்ராகிம் சொல்ஃபகாரி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார்.

அதில், ‘ஈரான் மீதும் அதன் எரிசக்தி மையங்கள் மீதும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், ஒட்டுமொத்த பிராந்தியத்தில் உள்ள எரிசக்தி நிலையங்களும் இலக்கு வைக்கப்படும். ஒரு பேரல் கச்சா எண்ணெய் 200 டாலருக்கும் அதிகமாக விற்பனையாவதை உங்களால் தாங்கிக்கொள்ள முடியும் என்றால், இந்த விளையாட்டை தாராளமாகத் தொடருங்கள்’ என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே சர்வதேச சந்தையில் பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலை 115 முதல் 119 டாலர் வரை எகிறியது. இந்த விலை உயர்வானது கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த போது இருந்த விலையை விட அதிகமாகும்.

உலக எண்ணெய் தேவையில் 20 சதவீதத்தை பூர்த்தி செய்யும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதி தற்போது பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 200க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட எண்ணெய் கப்பல்கள் நடுக்கடலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கத்தாரின் ராஸ் லாஃபான் எரிவாயு நிலையம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால், அந்நாடு தனது ஏற்றுமதியில் சில தடைகளை அறிவித்துள்ளது. இதனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்வதால், எண்ணெய் விலை 120 டாலரை தாண்டினால் நாட்டின் பணவீக்கம் 1 முதல் 2 சதவீதம் வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலை சமாளிக்க, இந்திய அரசு தனது அவசர கால எண்ணெய் சேமிப்பை பயன்படுத்த ஆலோசித்து வருகிறது. இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த விலை உயர்வை பெரிய விஷயமாக கருதவில்லை என்றாலும், உலக பொருளாதார வீழ்ச்சியை தடுக்க ஜி7 நாடுகள் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளன.

Related Stories: