தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு விவாதிக்க மறுப்பு: மக்களவை, மாநிலங்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு..!!

டெல்லி: தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு விவாதிக்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். தொகுதி மறுசீரமைப்பால் தென்னிந்திய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் இது தொடர்பாக விவாதிக்க திமுக கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்திருந்தார். இதுகுறித்து விவாதிக்க அவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதி மறுத்ததால் திமுக எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து, மாநிலங்களவையில் இருந்தும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது. மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொண்டால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கும் என திருச்சி சிவா எம்.பி தெரிவித்தார்.

தொகுதி மறுசீரமைப்பு செய்ய ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவினால் தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் இருப்பதாக தமிழக அரசு கூறி வருகிறது. தென் மாநிலங்களில் தொகுதி குறைய வாய்ப்புள்ளதால் தென் மாநில முதல்வர்கள் இதற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதுடன் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு விவாதிக்க மறுப்பு: மக்களவை, மாநிலங்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: