காலிஸ்தான் ஆதரவு சக்திகள் குறித்து நியூசிலாந்து பிரதமரிடம் கவலை தெரிவித்த மோடி: 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் சில காலிஸ்தானி ஆதரவு சக்திகள் குறித்து நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனிடம் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். இந்நிலையில், அவரது பயணத்தின் முக்கிய நிகழ்வாக பிரதமர் மோடி, லக்சன் சந்திப்பு டெல்லியில் நேற்று நடந்தது.

இதில் இருதரப்பு உறவு, வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய இரு தலைவர்களும் கல்வி, விளையாட்டு, விவசாயம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க 6 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தீவிரவாதத்துக்கு எதிராக நாங்கள் இருவரும் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம்.

நியூசிலாந்தில் மார்ச் 15, 2019 அன்று நிகழ்ந்த கிறைஸ்ட் சர்ச் தீவிரவாத தாக்குதலாக இருந்தாலும் சரி, நவம்பர் 26, 2008 அன்று நடந்த மும்பை தாக்குதலாக இருந்தாலும் சரி, எந்த வடிவத்திலும் தீவிரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தச் சூழலில், நியூசிலாந்தில் சில சட்டவிரோத சக்திகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்த எங்கள் கவலையை பகிர்ந்து கொண்டோம். இந்த சட்டவிரோத சக்திகளுக்கு எதிராக நியூசிலாந்து அரசின் ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து பெறுவோம் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post காலிஸ்தான் ஆதரவு சக்திகள் குறித்து நியூசிலாந்து பிரதமரிடம் கவலை தெரிவித்த மோடி: 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து appeared first on Dinakaran.

Related Stories: