×
Saravana Stores

எடப்பாடி நண்பர் நிறுவனங்களில் 5 நாட்கள் நடந்த ஐடி ரெய்டு நிறைவு: கட்டுக்கட்டாக பணம், முக்கிய ஆவணங்கள், பென்டிரைவ், லேப்டாப் பறிமுதல்

திருச்சி: எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவன் கல்வி நிறுவனங்களில் கடந்த 5 நாட்களாக நடந்து வந்த ஐடி சோதனை நேற்று நிறைவடைந்தது. இந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம், பென்டிரைவ், லேப்டாப், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பருமானவர் இளங்கோவன். இவர் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் தலைவர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே எம்.புதுப்பட்டியில் இளங்கோவனுக்கு சொந்தமான எம்ஐடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், பள்ளிகள், முசிறி அருகே உள்ள வெள்ளாளப்பட்டியில் வேளாண் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு உரிய கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாண் பொறியியல் கல்லூரிகளில் கடந்த 22ம் தேதி 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை துவக்கினர். கடந்த 4 நாட்களாக கல்வி குழுமங்களில் சோதனை நடந்தது. நேற்று முன்தினமும் விடிய விடிய நீடித்த சோதனை 5வது நாளான நேற்று காலை 7.30 மணியுடன் முடிந்தது. இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், ஹார்டு டிஸ்க், வங்கி புத்தகங்கள், பென்டிரைவ், லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதேபோல், இளங்கோவனின் சம்பந்தியான தொழிலதிபர் பாலசுப்ரமணியத்துக்கு கோவையில் உள்ள அஸ்வின் பேப்பர் மில்ஸ், அவரது மகனுக்கு சொந்தமான பேப்பர் மில்ஸ் மற்றும் அலுவலகங்களில் கடந்த 22ம் தேதி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதுதவிர, கோவையை சேர்ந்த லட்சுமி டூல்ஸ் நிறுவன உரிமையாளர் வரதராஜன். அவரது மகன்கள் பொன்னுத்துரை, பார்த்திபன், செந்தில்குமார் ஆகியோர் நடத்தி வரும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வரதராஜன் தொடர்புடைய இடங்களான துடியலூர், ராவுத்தர் பிரிவு, செலக்கரிச்சல், கவுண்டம்பாளையம், பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டி, சிந்தாமணிபுதூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நிறைவடைந்தது. இங்கு லட்சக்கணக்கில் பணம், ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 11 இடங்களில் சோதனை நடந்தது. 9 இடங்களில் சோதனை நிறைவு பெற்றது. பேப்பர் மில்ஸ் அதிபருக்கு சொந்தமான 2 இடங்களில் மட்டும் சோதனை தொடர்கிறது. இங்கு லட்சக்கணக்கில் பணம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

The post எடப்பாடி நண்பர் நிறுவனங்களில் 5 நாட்கள் நடந்த ஐடி ரெய்டு நிறைவு: கட்டுக்கட்டாக பணம், முக்கிய ஆவணங்கள், பென்டிரைவ், லேப்டாப் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Trichy ,Edappadi Palaniswami ,Ilangovan ,Salem Suburban District ,AIADMK… ,Dinakaran ,
× RELATED எரிந்து கொண்டிருக்கும் அதிமுகவை...