நவ.5, 6ம் தேதி கோவையில் கள ஆய்வு அவதூறு பரப்ப முயன்று தோல்வியடைந்த இபிஎஸ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: மழைக்கால நிவாரணப் பணிகள் திறம்பட நடக்கும் நிலையில் அரசு மீது அவதூறு பரப்ப முயன்று எடப்பாடி பழனிசாமி தோல்வியடைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தொண்டர்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் முடங்கி போயிருந்த தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பினை மேம்படுத்த மாவட்டவாரியான ஆய்வுகளுக்குத் திட்டமிட்ட நிலையில், பருவ மழைக்காலம் தொடங்கி விட்டது.

இந்தாண்டு வடகிழக்கு பருவ மழையின் தொடக்கத்திலேயே சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், முதல்வரான உங்களில் ஒருவனான நானும், துணை முதல்வரும் உள்ளிட்ட அமைச்சர்களும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும், மேயர், சேர்மன், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அரசு நிர்வாகத்தினரும் இரவு பகல் பாராமல் களத்தில் நின்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பணியாற்றியதை ஊடகங்களும், திராவிட மாடல் அரசின் பணியை நேரில் பார்த்த பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.

அதேபோல், பருவமழை தொடர்கின்ற நிலையில், மழைநீர் தேங்குகிற இடங்களில் உடனே அவற்றை வடியச் செய்வது, போக்குவரத்துக்கும் அத்தியாவசிய தேவைக்கும் பாதிப்பின்றி உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்ட மழைக்கால நிவாரண பணிகள் திறம்பட நடைபெற்று வரும் நிலையில், இதனை பொறுக்க முடியாமலும், தாங்கள் அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்காததாலும் எதிர் வரிசையிலே இருப்பவர்கள், அதிலும் தங்களுடைய 10 ஆண்டுகால மோசமான ஆட்சிக்காலத்தில், கடைசி 4 ஆண்டுகளில் படுமோசமான நிர்வாகம் நடத்தியவர்கள், மக்கள் மீதான அக்கறையுடன் செயல்படும் திராவிட மாடல் அரசு மீது அடிப்படையில்லாத அவதூறுகளைப் பரப்ப முனைந்து, அதிலும் முனை முறிந்து போயிருக்கிறார்கள்.

அண்டை மாநிலமான கேரளாவில் ஏ.டி.எம். மையங்களைக் கொள்ளையடித்துவிட்டு, தமிழ்நாட்டுக்குள் வந்த கொள்ளையர்களைப் பிடிப்பதில் திறமையாக செயல்பட்ட நாமக்கல் மாவட்ட காவல்துறையினரை ஏற்கெனவே பாராட்டி கடிதம் எழுதியிருந்தேன். டி.ஜி.பி. தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்திலும் பாராட்டியிருந்தேன். நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தலைமையிலான தீரமிக்க காவல்துறையினரை நேரில் சந்தித்துப் பாராட்டினேன்.

கலைஞர் முதல்வராக இருந்தபோது, துணை முதல்வராக பொறுப்பினை வகித்த உங்களில் ஒருவனான நான் சட்டமன்றத்தில், ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த அருந்ததியர் இன மக்களுக்கான 3 சதவீத உள்ஒதுக்கீட்டு தீர்மானத்தை முன்மொழியும் வாய்ப்பினை பெற்றேன். கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அந்த இடஒதுக்கீடு, அண்மையில் உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலையும் பெற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றம் கண்டிருப்பதைக் காணும்போது அவர்களுக்கான உள் ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை நிறைவேற்றும் வாய்ப்பைப் பெற்ற உங்களில் ஒருவனாகப் பெருமை கொள்கிறேன்.

சொன்னதைச் செய்வோம் என்ற கலைஞர் நெறியிலும், சொல்லாமலும் செய்வோம் என்ற முறையிலும், நாமக்கல்லில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உரையாற்றும்போது, திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியினை வழங்கி, திட்டங்கள் செயல்படுத்தும் முறையைக் கண்காணிப்பதற்காக நவம்பர் மாதம் முதல் மாவட்டந்தோறும் நேரில் கள ஆய்வு செய்யவிருக்கிறேன் என்பதையும் தெரிவித்தேன்.

அதன்படி, விழாவில் திரண்டிருந்த மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் நேரலையில் நிகழ்வைப் பார்த்த பொதுமக்களும் இந்த அறிவிப்புக்குப் பெரும் வரவேற்பை அளித்துள்ளனர். திராவிட மாடல் அரசு தனது திட்டங்களை முழுமையாக நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் உள்ள தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், பண்டிகை நாட்கள் முடிவடைந்த பிறகு, நவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்கு சென்று கள ஆய்வினை தொடங்க இருக்கிறேன்.

மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன். கள ஆய்வும் தொடரும், திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களும் தொடரும். கள ஆய்வுப் பணிகளை அந்தந்த மாவட்டங்களில் நிறைவு செய்தபிறகு, கழகப் பணிகளையும் ஆய்வு செய்வேன். உங்களையும் நேரில் கண்டு நெஞ்சம் மகிழ்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

* பண்டிகை நாட்கள் முடிவடைந்த பிறகு, நவம்பர் 5, 6 தேதிகளில் கோவைக்கு சென்று கள ஆய்வினை தொடங்க இருக்கிறேன்.

* மற்ற மாவட்டங்களிலும் தொடரவிருக்கிறேன்.

* கள ஆய்வும் தொடரும், திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களும் தொடரும்.

The post நவ.5, 6ம் தேதி கோவையில் கள ஆய்வு அவதூறு பரப்ப முயன்று தோல்வியடைந்த இபிஎஸ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: