மாவு அரைக்கும் மெஷினில் மின்சாரம் தாக்கி பெண் பலி

பேரணாம்பட்டு, அக்.25: பேரணாம்பட்டு அருகே மாவு அரைக்கும் மெஷினில் மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக பலியானார். பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர். இவரது மனைவி லதா(45). இவர் தனது வீட்டின் வெளியே மெஷின் வைத்து மாவு அரைக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லதா மாவு அரைக்கும் பணியை முடித்துவிட்டு மெஷினை தண்ணீர் ஊற்றி கழுவிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராமல் மெஷினில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி லதா தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு பேரணாம்பட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், லதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த பேரணாம்பட்டு எஸ்எஸ்ஐ கோபிகிருஷ்ணன் மற்றும் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மாவு அரைக்கும் மெஷினில் மின்சாரம் தாக்கி பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: