100 ஆண்டுகள் பழமையான சைதாப்பேட்டை சந்தை ரூ.24 கோடியில் சீரமைப்பு: விரைவில் பணிகள் தொடக்கம்

சென்னை: பழமைவாய்ந்த சைதாப்பேட்டை மார்க்கெட் ரூ.24 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சைதாப்பேட்டை காய்கறி மார்க்கெட் மிகவும் பழமையானது. இங்கு காய்கறி, பழங்கள் மற்றும் மீன் மார்க்கெட் என சிறு கடைகள் உட்பட நூறு கடைகள், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது. நூற்றாண்டுக்கு மேலாக இயங்கி வரும் சிறப்பு மிக்க இந்த மார்க்கெட்டை, மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

100 ஆண்டுகள் பழமையான இந்த மார்க்கெட் கட்டிடங்கள் சிதிலமடைந்துள்ளதால், இதனை ரூ.24 கோடி செலவில் புதுப்பிக்க மாநகராட்சி கடந்தாண்டு முடிவு செய்தது. இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. எனவே, விரைவில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகள் 2026க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், 1 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங், காய்கறிகளை ஏற்றி இறக்க இடங்கள், கழிப்பறைகள், குடிநீர் மற்றும் அகலமான பாதைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் 200 கடைகள் அமைக்கப்படவுள்ளது. குறிப்பாக, இந்த மார்க்கெட்டில் கசிந்த கூரைகள், மோசமான வடிகால் மற்றும் வரையறுக்கப்பட்ட உள்கட்டமைப்பு போன்ற சிக்கல்களைத் தீர்ப்பதை இந்த சீரமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மார்க்கெட்டை தற்காலிகமாக ஏதேனும் ஒரு மைதானத்துக்கு இடமாற்றம் செய்து பணிகளை விரைந்து முடித்து இங்குள்ள வியாபாரிகள் அனைவருக்கும் அவரவர் வைத்துள்ள இடத்துக்கு ஏற்றார் போல், அதே அளவில் கடைகளை வழங்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.  அதேபோல், கடந்த 1996ம் ஆண்டு சென்னை மேயராக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தப் பகுதியில் நடைபாதை வியாபாரிகளுக்கு நிரந்தரமாக சிறு கடைகளை கட்டி வழங்கினார். தற்போது அந்த இடத்தை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

The post 100 ஆண்டுகள் பழமையான சைதாப்பேட்டை சந்தை ரூ.24 கோடியில் சீரமைப்பு: விரைவில் பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: