×
Saravana Stores

காஞ்சி தீப்பாஞ்சி அம்மன் கோயிலில் 500 ஆண்டுகள் பழமையான சதிக்கல் சிற்பம் தோண்டி எடுப்பு

காஞ்சிபுரம், அக்.19: காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் பழமையான தீப்பாஞ்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில், வளாகத்தில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் மு.அன்பழகன், ந.அப்பாதுரை ஆகியோர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுமார் 500 ஆண்டுகள் பழமையான சதிக்கல் சிற்பம் மண்ணில் புதையுண்டு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து, பேராசிரியர் மு.அன்பழகன் கூறியதாவது: சதிக்கல் என்பது போரில் ஈடுபட்டு உயிர்நீத்த வீரரின் மனைவி, அவனது இறப்பை தாங்க முடியாமல் கணவனின் சிதையில் பாய்ந்து இறந்துபோகும் நிலையில், அவளின் நினைவாக நடப்படும் கல். இந்நினைவு கல்லில் கணவன் மற்றும் மனைவி என இருவரின் சிற்பமும் இடம்பெறும்.

இதுபற்றிய தகவல்கள் தொல்காப்பியம் முதற்கொண்டு பல்வேறு தமிழ் இலக்கியங்களிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.இக்கோயிலின், தரைத்தளம் முழுவதும் சிமெண்ட்டால் சமன் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இச்சிற்ப தொகுதியானது 22 செ.மீ உயரம் மட்டும் வெளியில் தெரியும்படி இருந்தது. அதனை உரியவர்களின் அனுமதியுடன் தோண்டி எடுத்து ஆய்வு செய்தோம். இச்சிற்பம் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் தீப்பாஞ்சி அம்மன் கோயிலில் வழிபாட்டிலும் இருந்து வந்திருக்கிறது.

கல்வெட்டு எழுத்துக்கள் எதுவுமில்லாத இச்சதிக்கல் சிற்பம் 74 செ.மீ உயரமும், 38 செ.மீ அகலமும் கொண்டுள்ளது. இச்சிற்ப தொகுதியில் 42 செ.மீட்டரில் ஒரு வீரரும், 37 செ.மீ உயரத்தில் அவன் மனைவியும் புடைப்பு சிற்பமாக உள்ளனர். வீரனின் இடதுகை அம்பு ஒன்றை உயர்த்திப்பிடித்திருக்க அவனது வலதுகை வில்லின் நாணை இழுத்துப்பிடித்துள்ளது. இரண்டு சிற்பங்களின் பாதங்களும் இடது பக்கம் திருப்பிய நிலையில் உள்ளன. வீரனின் தலையில் உள்ள கொண்டை மேல்நோக்கியும், பெண்ணின் கொண்டை வலது பக்கமாகவும் உள்ளது.

இச்சிற்பத்தொகுதி மிக அதிகமாக மழுங்கி இருப்பதால் அணி கலன்கள் மற்றும் ஆடைகள் பற்றியும் தெளிவாக அறியமுடியவில்லை. வீரனின் வலது கையினை அவனது மனைவி தன் இடக்கரம்கொண்டு பிடித்திருக்கின்றாள், மனைவியின் வலதுகை அவளது அடிவயிற்று பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இப்பெண்ணின் வயிறு கர்ப்பமாக இருப்பது போன்று மிகவும் பெருந்தியுள்ளது. இச்சதிக்கல்லில் உள்ள பெண் கர்ப்பிணியாக இருக்கும்போது, கணவரின் சிதையில் புகுந்து உயிர் நீத்திருக்கலாம் எனவும், இதன் காலம் கி.பி.15ம் நூற்றாண்டாகவும் இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.

The post காஞ்சி தீப்பாஞ்சி அம்மன் கோயிலில் 500 ஆண்டுகள் பழமையான சதிக்கல் சிற்பம் தோண்டி எடுப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchi Deepanji Amman Temple ,Kanchipuram ,Enathur ,Deepanji Amman temple ,Kanchipuram Shankara University ,Assistant ,Tamil ,M. Anpahagan ,N. Appadurai ,
× RELATED காஞ்சி மீனாட்சி மருத்துவ கல்லூரி...