விமான போக்குவரத்து போல உலகளாவிய ஏஐ, டிஜிட்டல் விதிகள் வகுக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘‘விமான போக்குவரத்தை போல செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கும் உலகளாவிய விதிமுறைகள் கொண்ட கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்’’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்துதல் சபையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும், 8வது இந்தியா மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியையும் தொடங்கிவைத்து கண்காட்சியை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவில் 120 கோடி மொபைல் போன் பயனர்கள் உள்ளனர். 95 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். 5ஜி சேவைகள் இப்போது நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் கிடைக்கின்றன. அடுத்தகட்டமாக 6ஜி சேவைக்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. டிஜிட்டல் உலகிற்கு உலகளாவிய விதிகள் வகுக்கப்பட வேண்டும்.

இன்று டிஜிட்டல் கருவிகள் மற்றும் அதன் பயன்பாடு எந்தவொரு எல்லைக்கும் அப்பாற்பட்டவை. எந்தவொரு நாடும் தனது மக்களை இணைய அச்சுறுத்தலில் இருந்து தனியாக பாதுகாக்க முடியாது. எனவேதான், இதற்கு உலகளாவிய கட்டமைப்பு தேவை. டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய விதிகள் வகுக்கப்பட வேண்டும். எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதை தீர்மானிக்க வேண்டும். இதற்கு உலகளாவிய அமைப்புகள் பொறுப்பேற்க வேண்டும். பழங்கால பட்டுப் பாதையாக இருந்தாலும் சரி, இன்றைய தொழில்நுட்பப் பாதையாக இருந்தாலும் சரி, இந்தியாவின் ஒரே நோக்கம் உலகை இணைப்பதும் முன்னேற்றத்தின் புதிய கதவுகளைத் திறப்பதும் மட்டுமே.இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

The post விமான போக்குவரத்து போல உலகளாவிய ஏஐ, டிஜிட்டல் விதிகள் வகுக்கப்பட வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: