ஊட்டி ரோஜா பூங்கா சாலையோரங்களில் ஆபத்தான மரங்களை அகற்ற கோரிக்கை

 

ஊட்டி, அக். 1: ஊட்டி ரோஜா பூங்கா செல்லும் சாலையோரங்களில் உள்ள ராட்சத மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலும் ராட்சத கற்பூர மரங்கள் உள்ளன. குறிப்பாக, சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பகுதிகளிலும் இது போன்ற ராட்சத மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் பருவமழை காலங்களில் விழுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சில சமயங்களில் உயிர் சேதமும் ஏற்படுகிறது. இதனால், சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகளில் உள்ள ராட்சத மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி நகரில் இருந்து ரோஜா பூங்கா செல்லும் சாலையோரங்களில் ஏராளமான ராட்சத கற்பூர மரங்கள் மற்றும் சீகை மரங்கள் வளர்ந்துள்ளன. இதில், ஒரு சில மரங்கள் அகற்றப்பட்டன.

ஆனால், அகற்றப்படாமல் ஏராளமான மரங்கள் உள்ளன. காற்றுடன் மழை பெய்தால் இவைகள் விழும் அபாயம் உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கும் நிலையில், இந்த மரங்களால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டள்ளது.  எனவே, விபத்து ஏதும் ஏற்படும் முன் ஊட்டி ரோஜா பூங்கா செல்லும் சாலையோரத்தில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற வேண்டும் என ெபாதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ஊட்டி ரோஜா பூங்கா சாலையோரங்களில் ஆபத்தான மரங்களை அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: