தெப்பக்காடு யானைகள் முகாமில் பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள்

ஊட்டி, மே 22: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாம் செல்லும் சாலையோரங்களில் பூத்துக் குலுங்கும் சிவப்பு கொன்றை மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் அவ்வப்போது பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்து காணப்படும். கொன்றை மலர்கள், சேவல் கொன்றை, ஜெகரண்டா, காட்டு டேலியா, காட்டு சூரியகாந்தி மலர்கள் போன்றவை அவ்வப்போது காணப்படும். அப்பகுதியே அழகாக காட்சி அளிக்கும். இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்துச் செல்வது மட்டுமின்றி புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாம் செல்லும் சாலையோரங்களிலும், கூடலூர் – மசைூர் சாலைகளிலும் பல இடங்களில் ஏராளமான மயில் கொன்றை மரங்கள் உள்ளன.

கோடை காலங்களில் இந்த மரங்களில் செந்நிற கொன்றை மலர்கள் பூத்து காணப்படும். கடந்த இரு மாதங்களாக இப்பகுதிகளில் உள்ள மரங்களில் சிவப்பு நிற கொன்றை மலர்கள் பூத்துக் காணப்படுகிறது. இந்த மரங்களில் இருந்து உதிர்ந்து விழும் மலர்கள் சாலையில் கொட்டி கிடப்பதால், சாலையும் செந்நிறத்தில் காட்சியளிக்கிறது. இப்போது முதுமலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளும், கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த மலர்களின் அழகை ரசித்து செல்கின்றனர்.

The post தெப்பக்காடு யானைகள் முகாமில் பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள் appeared first on Dinakaran.

Related Stories: