மாடியிலிருந்து கீழே விழுந்ததில் தனியார் பள்ளி ஆசிரியர் பரிதாப பலி உறவினர்கள் சாலை மறியல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே மாடியிலிருந்து கீழே விழுந்ததில் தனியார் பள்ளி ஆசிரியர் இறந்ததற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்திரமேரூர் அடுத்த குப்பையநல்லூர் மேட்டுகாலனி பகுதியை சேர்ந்தவர் செந்தில் (40). தனியார் பள்ளி ஆசிரியர். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். செந்தில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு உத்திரமேரூர் அருகே நீரடி பகுதியிலுள்ள சக ஆசிரியர் மற்றும் நண்பர்களுடன் வீட்டின் மொட்டை மாடியில் மது அருந்தியுள்ளார்.

போதையில் கால் தடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்து செந்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சக ஆசிரியர் மற்றும் நண்பர்கள்தான் செந்திலை மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்ததாக கூறி அவர்களை கைது செய்ய வலியுறுத்தி உத்திரமேரூர் எல். எண்டத்தூர் சாலையில் மேட்டுக்காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன்பேரில், உறவினர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post மாடியிலிருந்து கீழே விழுந்ததில் தனியார் பள்ளி ஆசிரியர் பரிதாப பலி உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: