என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் சடலத்தை பெற 5 மனைவிகளும் உரிமைகோரி தகராறு; பலகட்ட பேச்சுக்கு பிறகு முதல் மனைவியிடம் உடல் ஒப்படைப்பு; போலீஸ் பாதுகாப்புடன் உடல் எரியூட்டப்பட்டது

சென்னை: என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடி சீசிங் ராஜா உடலை பெற அவரது 5 மனைவிகளும் உரிமை கோரி தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு ஒரு வழியாக போலீசார், முதல் மனைவி ஜானகியிடம் சடலத்தை ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து நேற்று சீசிங் ராஜா உடல் போலீஸ் பாதுகாப்புடன் எரியூட்டப்பட்டது. சென்னையில் பிரபல கூலிப்படை தலைவன் சீசிங் ராஜா ஆந்திராவில் தனிப்படை போலீசாரால் கடந்த 22ம் தேதி கைது செய்தனர். பிறகு வேளச்சேரியில் பார் உரிமையாளர் ஆனந்தன் என்பவரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் நிலுவையில் இருந்ததால், வேளச்சேரி போலீசாரிடம் சீசிங் ராஜா ஒப்படைக்கப்பட்டார்.

பிறகு வேளச்சேரி போலீசார் விசாரணைக்கு பிறகு பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்ய நீலாங்கரை அருகே உள்ள அக்கரை பகுதிக்கு நேற்று முன்தினம் அதிகாலை அழைத்து சென்ற போது, ரவுடி சீசிங் ராஜா மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை சுட்டபோது என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.இதனை தொடர்ந்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் வீடியோ பதிவுடன் சீசிங் ராஜா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு உடலை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். அப்போது ரவுடி சீசிங் ராஜா மனைவிகள் என்று 5 பேர் தனித்தனியாக போலீசாரிடம் ‘‘எங்களிடம்தான் சீசிங் ராஜாவின் உடலை ஒப்படைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.

இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர். இதனால் ராயப்பேட்டை மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. ரவுடி சீசிங் ராஜா, ஜானகி (42) என்பவரை, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தனது வீட்டிற்கு தெரியாமல் இரண்டாவதாக ஜான்சி (36) என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதோடு இல்லாமல் மூன்றாவது ஆந்திராவை சேர்ந்த வழக்கறிஞர் வனித்ரா (27) என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த 3 மனைவிகளுக்கும் தெரியாமல் மேலும் 2 பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுதவிர சீசிங் ராஜாவுக்கு சென்னை மற்றும் ஆந்திராவில் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார்.

பின்னர் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, சீசிங் ராஜாவின் உடலை முதல்மனைவி ஜானகியிடம் நேற்று முன்தினம் இரவு போலீசார் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து கிழக்கு தாம்பரம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள வீட்டில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு ரவுடி சீசிங் ராஜா உடல் வைக்கப்பட்டது. அங்கு சேலையூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பிறகு நேற்று பிற்பகல் சீசிங்ராஜாவின் உடல் சிட்லப்பாக்கம் இடுகாட்டில் எரியூட்டப்பட்டது. முன்னதாக சீசிங் ராஜா உடலுக்கு முதல் மனைவியின் இளைய மகன் லோகேஷ் இறுதி அஞ்சலி செய்து தீ மூட்டினார்.

The post என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் சடலத்தை பெற 5 மனைவிகளும் உரிமைகோரி தகராறு; பலகட்ட பேச்சுக்கு பிறகு முதல் மனைவியிடம் உடல் ஒப்படைப்பு; போலீஸ் பாதுகாப்புடன் உடல் எரியூட்டப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: