வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை

வேளச்சேரி: வீட்டு வாசலில் போதையில் தூங்கி கொண்டிருந்த மீன் வியாபாரி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த, 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பெரும்பாக்கம், எழில் நகர், 41வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன் (25). இவரது மனைவி சவுந்தர்யா. இவர்கள் இருவரும் மீன் கடையில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, இவர்கள் குடியிருக்கும் 3வது மாடியின் வீட்டு வாசலில் கலைவாணன் போதையில் படுத்து தூங்கியுள்ளார்.

இரவு 11.50 மணிக்கு கலைவாணன் அலறும் சத்தம் கேட்டு, அவரது மனைவி சவுந்தர்யா வெளியே ஓடி வந்து பார்த்தார். அப்போது, தலை நசுங்கிய நிலையில் அவர் இறந்து கிடந்தார். அவரது அருகில் அம்மிக்கல் ஒன்றும் கிடந்துள்ளது. தகவலறிந்த பெரும்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கலைவாணன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கலைவாணன் மனைவி சவுந்தர்யா பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணையில், கடந்த 3 மாதத்திற்கு முன் கலைவாணனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சரளா என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் சரளா மகன் வசந்த் (21) மற்றும் உறவினர்கள் கலைவாணி, தமிழ், சந்தோஷ் (எ) வெள்ளை சந்தோஷ், அருண் உள்பட 5 பேரை தேடி வருகிறார்கள்.

கொலையான கலைவணன் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது, என தெரிய வந்துள்ளது.  மேலும், அப்பகுதியில் கஞ்சா விற்பவர்கள் குறித்து போலீசுக்கு கலைவாணன் தகவல் கொடுத்ததால் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: