இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் துப்பாக்கியால் மிரட்டி, கல் வீசி தாக்கி மீனவர்கள் விரட்டியடிப்பு: ராமேஸ்வரத்தில் மீண்டும் பதற்றம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களை கல்வீசி தாக்கி, துப்பாக்கியை காட்டி மிரட்டி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நண்பகலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அதிவேக பிளாஸ்டிக் படகில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். இதையடுத்து, பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீனவர்கள் வலைகளை வெட்டிவிட்டு தப்பினர்.

தொடர்ந்து அதிவேகமாக விரட்டி வந்த இலங்கை கடற்படையினர், கற்களை கொண்டு மீனவர்களின் படகுகள் மீது சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் துப்பாக்கியை காட்டி மிரட்டி, படகுகளை சிறைபிடிக்க முயன்றதால் அச்சமடைந்த மீனவர்கள் அங்கிருந்து தப்பி, வேறு பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த பதற்றத்தால் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தொடர்ந்து மீன் பிடிக்க முடியாமல் வேறு பகுதிகளுக்கு சென்றன. இதனால் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இரவு முழுவதும் மீன் பிடித்து சுமாரான மீன்பாடுடன் நேற்று காலை மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர். இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்களால் மீனவர்கள் மத்தியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

The post இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் துப்பாக்கியால் மிரட்டி, கல் வீசி தாக்கி மீனவர்கள் விரட்டியடிப்பு: ராமேஸ்வரத்தில் மீண்டும் பதற்றம் appeared first on Dinakaran.

Related Stories: