டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்த விவகாரம் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்: நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்திட்டார்

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோயிலில் கடந்த 2005ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டன. அதில் 6 சிலைகளை விருதுநகர் மாவட்டம் ஆலப்பட்டி என்ற கிராமத்தில் கடந்த 2008ம் ஆண்டு அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருந்த காதர் பாஷா பறிமுதல் செய்தார். ஆனால் அந்த சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பொழுது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேல், இன்ஸ்பெக்டர் காதர் பாஷா, மீட்கப்பட்ட 6 சிலைகளை சர்வதேச சிலை கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்துவிட்டதாக கடந்த 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் காதர் பாஷாவை அதிரடியாக கைது செய்தார்.

காதர் பாஷா கைது செய்யப்பட்டபோது, அவர் திருவள்ளூர் மாவட்டம் டிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த காதர் பாஷா, ஐஜி.பொன்.மாணிக்கவேல் தன்னை சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்புபடுத்தி கைது செய்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது. பிறகு சிபிஐ அதிகாரிகள் வழக்கு தொடர்பாக ஐஜி.பொன்மாணிக்கவேல் வீட்டில் கடந்த மாதம் 10ம் தேதி அதிரடியாக சோதனை நடத்தி வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அந்த ஆவணங்களின் படி ஐஜி.பொன்மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இதனால் சிபிஐ தன்னை கைது செய்யக்கூடும் என்பதால் பொன்மாணிக்கவேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, கடந்த மாதம் 30ம் தேதி பொன்மாணிக்கவேலுக்கு 4 வார காலத்திற்கு சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி பொன்மாணிக்கவேல் நேற்று நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

The post டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்த விவகாரம் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்: நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்திட்டார் appeared first on Dinakaran.

Related Stories: