காவல்துறை குறித்து அவதூறாக பதிவிட்டோர் மீது நடவடிக்கை: சாட்டை துரைமுருகன் வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சாட்டை துரைமுருகன் தொடர்ந்த வழக்கில், காவல்துறை குறித்து தவறாக பதிவிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ததற்காக திருச்சி எஸ்பி வருண்குமார் மீது, சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவு செய்கின்றனர்.

இது பணியில் உள்ள அதிகாரிகளை அச்சுறுத்தும் செயல். இவர்களை கைது செய்ய வேண்டும் என்பதால், ஜாமீன் வழங்கக்கூடாது’’ என கூறப்பட்டது. மனுதாரர் தரப்பில், ‘‘எஸ்பி குறித்து சமூக வலைத்தளத்தில் மனுதாரர் எந்த இடத்திலும் தவறாக பதிவிடவில்லை. நெட்டிசன்கள் தான் அவதூறாக பதிவிட்டுள்ளனர்’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரர் எஸ்பி குறித்து எதுவும் பதிவிடவில்லை. எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. காவல் துறை அதிகாரிகள் குறித்தும், எஸ்பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்ட நெட்டிசன்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

 

The post காவல்துறை குறித்து அவதூறாக பதிவிட்டோர் மீது நடவடிக்கை: சாட்டை துரைமுருகன் வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: