ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி நாகேந்திரனின் மனைவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகேந்திரனை என்கவுண்டர் செய்யக்கூடாது என்ற மனுவை பரீசிலிக்குமாறு உத்தரவிடக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனின் மனைவி விசாலாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தனது கணவருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர் கொள்ள தயாராக உள்ளோம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தை காவல் துறையினர் போலி என்கவுண்டர் செய்துள்ளனர்.

அதே போல எனது கணவரையும் போலீசார் என்கவுண்டர் செய்யக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தேன். ஆனால் அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறையில் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் எதன் அடிப்படையில் என்கவுண்டர் செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பயத்தின் அடிப்படையில் நிவாரணம் கோர முடியாது. சிறையில் அவர் பாதுகாப்பாகத்தானே இருக்கிறார் என்று கேட்டார். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், என்கவுண்டர் செய்வோம் என்று விசாரணையின் போது போலீசார் நாகேந்திரனிடம் கூறியுள்ளனர் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்த ஆதாரங்களும் இல்லாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி நாகேந்திரனின் மனைவி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: