திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சொந்தக்கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் (ம) ஒலிப்பெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்கு தேவையான கதிர்பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டான்ட்கள் மற்றும் பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள், தேவாலயத்திற்கு சுற்றுச் சுவர் அமைத்தல். தேவாலய கட்டத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை, 10 முதல் 15 வருடம் வரை இருப்பின் ரூ.2 லட்சத்திலிருந்து 10 லட்சமாகவும், 15 முதல் 20 வருடம் வரை இருப்பின் ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாகவும், 20 வருடங்களுக்குமேலிருப்பின் ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு மூலம் பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து, நிதியுதவி கோரி விண்ணப்பிக்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன் மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இருதவணைகளாக மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுடன் தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். எனவே, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள தகுதியுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

The post திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: