நாட்டிற்காக பதக்கம் வென்றவர்கள் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச மல்யுத்த சம்மேளனம் கண்டனம் : அங்கீகாரம் ரத்தாகும் எனவும் எச்சரிக்கை!!

டெல்லி : மல்யுத்த வீராங்கனைகள் போராட்ட விவகாரத்தில் தலையிட்டுள்ள சர்வதேச மல்யுத்த சம்மேளனம் அடுத்த 45 நாட்களுக்குள் இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்தப்படவில்லை எனில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது. சர்வதேச மல்யுத்த சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கூறும் பாலியல் புகார்கள் குறித்து கடந்த பல மாதங்களாக கவனித்து வருவதாகவும் இதன் காரணமாக ஆசிய சேம்பியன் ஷிப் போட்டியை டெல்லியில் நடத்துவதற்கு பதிலாக வேறு இடத்தில் நடத்த இந்த ஆண்டு தொடக்கத்திலேயே யோசித்ததாகவும் சர்வதேச மல்யுத்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து, போராட்டம் நடத்திய இந்திய மல்யுத்த வீரர்களை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்த மல்யுத்த சம்மேளனம், பிரிஜ் பூஷனுக்கு எதிரான விசாரணையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளது.அடுத்த 45 நாட்களுக்குள் இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்தப்படவில்லை எனில் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று சர்வதேச மல்யுத்த சம்மேளனம் எச்சரித்துள்ளது. அங்கீகாரம் ரத்து செய்யப்படும் பட்சத்தில் இந்திய தேசியக்கொடியுடன் இந்திய வீரர்கள் விளையாட அனுமதிக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சம்மேளனத்தின் தலையீட்டால் ஒன்றிய அரசுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

The post நாட்டிற்காக பதக்கம் வென்றவர்கள் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச மல்யுத்த சம்மேளனம் கண்டனம் : அங்கீகாரம் ரத்தாகும் எனவும் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: