தந்தை, மகன் மோதல் முற்றுகிறது ராமதாஸ் கூட்டத்தை புறக்கணித்தார் அன்புமணி: 159 மாவட்ட செயலாளர்கள், தலைவர்களும் வரவில்லை

* வெறும் 31 பேர் மட்டுமே கலந்துகொண்டனர்
* நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பம்

திண்டிவனம்: தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தை அன்புமணி, 159 மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களும் புறக்கணித்தனர். 32 பேர் மட்டுமே பங்கேற்றனர். தந்தை-மகன் இடையே மோதல் முற்றி வரும் நிலையில், ராமதாஸ் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள் புறக்கணித்து உள்ளதால் பாமகவில் அன்புமணி கை ஓங்கி உள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ராமதாசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்ற எதிர்பார்ப்பு பாமகவில் எழுந்துள்ளது.

பாமகவில் சமீப காலமாக நிறுவன தலைவரான தந்தை ராமதாசுக்கும், தலைவரான மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. கடந்த 2022ல் கட்சியின் இளைஞர் அணி தலைவராக கவுரவ தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரனுக்கு பதவி வழங்கப்பட்டது. இதற்கு தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து தமிழ்குமரன் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து தனது ஆதரவாளருக்கு இளைஞர் அணி தலைவர் பதவி வழங்கப்படும் என்று அன்புமணி எதிர்பார்த்தார்.

இந்நிலையில், புதுச்சேரியில் பாமக சார்பில் நடந்த புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பாமக மாநில இளைஞரணி தலைவராக தனது மகள் வழிப்பேரன் பரசுராமன் முகுந்தனை நியமிப்பதாகவும், அவர் தலைவர் அன்புமணிக்கு உதவியாக இருப்பார் என்றும் அறிவித்தார். இதற்கு டென்ஷனான அன்புமணி, ‘கட்சியில் இப்போதுதான் சேர்ந்தான், அவனுக்கு இந்த பதவியா? அவன் எனக்கு உதவியா இருப்பானா?’ என்று மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

உடனே ராமதாஸ், ‘நான் சொல்வதை கேட்பவர்கள்தான் இங்கு பதவியில் இருக்க வேண்டும், சொல்கிறதை கேட்டு இருங்கள். எதிர்க்கிறவர்கள் வெளியேறலாம்’ என்று கோபமாக கூறினார். பதிலுக்கு அன்புமணி, ‘பனையூரில் தனி அலுவலகம் தொடங்கி இருக்கிறேன், என்னை அங்கு வந்து சந்தியுங்கள்’ என்று தனது செல்போன் நம்பரையும் அறிவித்தார். இதனால் மேடையிலேயே ராமதாசுக்கும், அன்புமணிக்கும் பிளவு வெடித்தது. இதை தொடர்ந்து பனையூரில் நிர்வாகிகளை சந்தித்து அன்புமணி தனியாக ஆலோசனை நடத்தி வந்தார். இதையடுத்து ராமதாஸ் மற்றும் அன்புமணியை சமாதானம் செய்யும் முயற்சியில் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

திலகபாமா உள்ளிட்ட சிலர் அன்புமணிக்கு ஆதரவாக அறிக்கை விட, உட்கட்சி மோதல் வெளியிலும் வெடித்தது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், நானே பாமக தலைவர், அன்புமணி செயல் தலைவராக இருப்பார் என்று அறிவித்தார். ஆனால் அன்புமணி பொதுக்குழுவில் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டதால் தானே தலைவராக நீடிப்பதாக அன்புமணி கூறினார். இதனால், தந்தை – மகன் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. பின்னர் மூத்த நிர்வாகிகள் ராமதாஸை சமரசம் செய்தனர். ஆனால் ராமதாஸ் தான் அறிவித்த முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் சமசர முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஆனால், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை வன்னியர் இளைஞர் திருவிழா மாநாட்டில் ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக சேர்ந்து கலந்து கொள்வார்கள், அவர்களுக்கிடையே பிரச்னை முடிந்து விட்டது என்று கவுரவ தலைவர் ஜி.கே.மணி கூறினார். கடந்த 11ம் தேதி மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நடந்த வன்னியர் இளைஞர் திருவிழா மாநாட்டு நடந்தது. இதில் ராமதாசும், அன்புமணி கலந்து கொண்டனர். ஆனால், இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. அவர்களுக்குள் மோதல் போக்கே எதிரொலித்தது.

அந்த மாநாட்டில், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் செயல்கள் குறித்து ராமதாஸ் கடுமையாக எச்சரித்து பேசினார். அப்போது, ‘கட்சிக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் உழைக்காவிடில் யாராக இருந்தாலும் அவர்களது பதவி பறிக்கப்படும்… அது எம்எல்ஏவாக இருந்தாலும் சரி. கட்சியில் நான்தான். நான் இருக்கும் வரை நான் எடுப்பதுதான் முடிவு’ என்ற பேசினார். இதன் மூலம் ராமதாஸ் மீண்டும் அன்புமணியை குறைத்து பேசியதாக கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான சூழலில் பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் கூட்டம் 16ம் தேதி (நேற்று) காலை 10 மணியளவில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் என்றும், அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்றும் சமூக வலைதளத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்தார். இதில் ராமதாஸ் எதிர்பார்த்தபடி கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் பெரும்பாலானோர் கலந்து கொள்ளவில்லை. பாமகவில் மொத்தம் 91 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கென செயலாளர், தலைவர் என மொத்தம் 182 மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் பதவி வகிக்கிறார்கள்.

இதுதவிர மாநில நிர்வாகிகளும் 20க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில் ராமதாஸின் மூத்த மகள் காந்திமதி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, சேலம் அருள் எம்எல்ஏ, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி மற்றும் 11 மாவட்ட தலைவர்களும், 12 மாவட்ட செயலாளர்களும் வந்திருந்தனர். 79 மாவட்ட செயலாளர்கள், 80 மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ள நிலையில், கூட்டத்தை 45 நிமிடம் தாமதமாக தொடங்கிய ராமதாஸ், ஒன்றரை மணி நேரத்திற்குள் நடத்தி முடித்தார்.

கட்சிக்குள் தந்தை- மகன் இடையிலான உரசல் காரணமாக மாவட்ட தலைவர்கள், செயலாளர்களை அன்புமணி என்ன சொல்வார், என்ன செய்வார் என்ற பயத்தில் பலர் தோட்டத்துக்கு வருகை தரவில்லை என்று தெரிகிறது. இக்கூட்டத்தில் அன்புமணியும் கலந்து கொள்ளாததால் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். கட்சியில் யார் கை ஓங்கும் என்ற நிலைப்பாட்டில் இந்த மாவட்ட செயலாளர், தலைவர்கள் கூட்டத்தை ராமதாஸ் நடத்திய நிலையில் 90 சதவீதம் பேர் அவரது கூட்டத்தை புறக்கணித்துள்ளதால் கட்சியின் அதிகாரம் முழுவதும் அன்புமணி வசமே உள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

தோட்டத்துக்கு வராமலேயே மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் அன்புமணி வைத்துவிட்டதாக அக்கட்சியினரிடம் பரவலாக பேச்சுகள் அடிபடும் நிலையில், இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ராமதாஸ் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பட்சத்தில், நிர்வாகிகள் பதிலளிக்காவிடில் கட்சியை முழுமையாக கலைக்க வேண்டிய சூழலும் உருவாகலாம் என்பதால் இவ்விவகாரத்தில் அடுத்தகட்டமாக ராமதாஸ் என்ன முடிவெடுப்பார்? என்ற எதிர்பார்ப்பு பாமகவில் எழுந்துள்ளது. இவ்விவகாரத்தில் ராமதாஸ் குழப்பத்தில் இருப்பதாகவே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கும் நிலையில், அக்கட்சியின் கவுரவ தலைவரான ஜி.கே.மணி, கூட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்க்கும் வகையில் மாற்றுப் பாதையில் புறப்பட்டு சென்று விட்டார்.

* அன்புமணி தலைவரா, செயல் தலைவரா? ராமதாஸ் பேச்சால் மீண்டும் குழப்பம்
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, ‘‘12 ஆண்டுகளுக்கு பிறகு மாமல்லபுரத்தில் வன்னியர் சங்க மாநாடு நடந்தது. பணிகளை சிறப்பாக செய்ததற்காக அன்புமணியை நீங்கள் பாராட்டவில்லை என்ற வருத்தம் தொண்டர்கள் மத்தியில் இருக்கிறது’’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘நான் பெயரை சொன்னேன். செயல் தலைவர் அன்புமணி என்று சொன்னேன்’’ என்றார். ‘‘கடைசியாக நீங்கள் பாராட்டி பேசி முடிக்கும்போது திருக்கச்சூர் ஆறுமுகம் என்ற பெயரை மட்டுமே சொன்னீர்கள்’’ என்றதற்கு, ‘‘அவர் 2 மாதமாகவே அங்கேயே இருந்து இரவு, பகல் பாராமல் பணி செய்ததால் அவரையும் பாராட்ட வேண்டியது கடமை’’ என தெரிவித்தார்.

கூட்டத்துக்கு அன்புமணி வரவில்லை என கேட்டதற்கு, ‘‘செயல் தலைவர் அன்புமணி, கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்ட பதிவை பார்த்திருப்பார். அவர் வரலாம், வராமல் போகலாம்’’ என்று ராமதாஸ் கூறினார். பாமகவில் அன்புமணி தலைவராக உள்ளார். தந்தை- மகன் இடையிலான உரசலுக்கு பிறகு தற்போது செயல் தலைவர் அன்புமணி என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இருவரும் சமாதானமடைந்து விட்டதாக ஜி.கே.மணி கூறிய நிலையில், அன்புமணியை மீண்டும் செயல்தலைவர் என்று ராமதாஸ் குறிப்பிட்டுள்ளதால் அன்புமணி பாமக தலைவரா அல்லது செயல்தலைவரா? என்ற குழப்பம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் எழுந்துள்ளது. இது பாமகவில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

* கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பட்டியல்
பாமக மாவட்ட தலைவர், செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, மாணவர் சங்க தலைவர் கோபிநாத், இளைஞரணி செயலாளர் சுரேஷ், புதுச்சேரி அமைப்பாளர் கணபதி, இளைஞரணி செயலாளர் சேகர், மாணவரணி செயலாளர் சிவராஜ், சேலம் எம்எல்ஏ அருள் மற்றும் 12 மாவட்ட செயலாளர்களான மேகநாதன் (கிருஷ்ணகிரி), டேனியல், சண்முக வேலுச்சாமி (விருதுநகர்), சதீஷ்குமார் (திண்டுக்கல்), வீரான் ராவுத்தர் (கோவை), ஸ்டாலின் (தஞ்சை), தேவமணி (புதுச்சேரி), அருள் எம்எல்ஏ (சேலம்), ஜெயராஜ், புகழேந்தி, (விழுப்புரம்), ராஜசேகரன் (சிவகங்கை), சாந்தமூர்த்தி (செங்கை) மற்றும் மாவட்ட தலைவர்கள் அண்ணாமலை (கிருஷ்ணகிரி கிழக்கு), தியாகராஜ நாயுடு (கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம்), ராஜாதி ராஜா (கோவை), சந்தானதாஸ் (ராமநாதபுரம்), சங்கர் (தஞ்சை), துரை (புதுச்சேரி), கோவிந்தசாமி (ஈரோடு), சிவபிரகாஷம் (திருவள்ளூர் கிழக்கு), தினேஷ்குமார் (திருவள்ளூர் மேற்கு) ராஜ்குமார் (கள்ளக்குறிச்சி), பாவாடைராயன் (விழுப்புரம்) ஆகிய 11 பேர் கலந்து கொண்டனர். மேலும் ராமதாசின் மூத்த மகளான காந்திமதி பரசுராமனும் பங்கேற்றார்.

* படுத்துட்டே ஜெயிப்பது எப்படி என்று ஆலோசனை நடத்தினோம்: சிரிக்காமல் சொல்கிறார் ராமதாஸ்
திண்டிவனத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் முடிந்ததும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த கூட்டம் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் அல்ல. ஒரு வாரம் திட்டமிட்டு இன்று பாமகவின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், பொறுப்பாளர் கூட்டம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வன்னியர் சங்க கூட்டம், மகளிர் அணி கூட்டம், மாணவர் அணி கூட்டம், பசுமைத்தாயகம் அமைப்பு என அனைத்து அணி அமைப்புகளின் கூட்டம் நடைபெறும். பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு சோதனைகளை தாங்கி, கட்சி நலனுக்காக 50 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும், ஆட்சி அமைக்க வேண்டுமென ஆலோசனை செய்ய உள்ளோம். எனவே தான் சமூக நீதியோடு வாழ வேண்டுமென பாமக வன்னியர் சங்கம் பாடுபட்டு வருகிறது.

மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட மாநாட்டை கூட்டினோம், 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக எப்படி வேலை செய்ய வேண்டும், 50 தொகுதிகளில் படுத்துக் கொண்டு வெற்றிபெறும் வித்தையை அறிவுரையை வழங்கி உள்ளேன். நிர்வாகிகள் சொல்லும் யோசனையை நானும் கேட்கிறேன். யோசனையை பரிமாறிக் கொள்ள கூட்டத்தை கூட்டியுள்ளேன். 45 ஆண்டுகளாக ஊடகத்தினர் ஆதரவு அளித்து வருகிறீர்கள். நிர்வாகிகளை உற்சாகப்படுத்த வரவழைத்துள்ளேன். செயல் தலைவர் அன்புமணி, கூட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்ட பதிவை பார்த்திருப்பார்.

அவர் வரலாம், வராமல் போகலாம். 50 சட்டமன்ற தொகுதிகளை படுத்துக் கொண்டே ஜெயிக்கும் பலம் கொண்ட பாமக, கூட்டணியில் சேரும்போது அதிக தொகுதிகளில் வெற்றிபெறும். மாநாட்டு பணிகளில் இருந்த கட்சி நிர்வாகிகள் களைப்போடு இருப்பதால் கூட்டத்திற்கு வராமல் போயிருக்கலாம். கட்சியின் நிர்வாகிகள் யாரையும் கட்சி பதவியிலிருந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் விருப்பப்பட்டால் கட்சி பதவியில் இருந்து வெளியேறலாம். இவ்வாறு அவர் கூறினார்

* அன்புமணியுடன் மோதலா? தனித்து போட்டியா?
ராமதாஸ் கூறுகையில், ‘கட்சிக்குள் அப்பா, மகன் என்ற கோஷ்டி பிரச்னை ஏதுமில்லை. மார்கழி மாதத்தில் மட்டுமே பஜனை கோஷ்டிகள் உருவாகும். முதல்கட்டமாக 50 தொகுதிகளில் வெற்றிபெற கடுமையாக வேலை செய்கிறோம். கூட்டணிதான், அதாவது தனியாக நின்றாலும் 50ல் குறைந்தது 40ல் வெற்றிபெற வேண்டும் என்று உழைக்கிறோம். அப்படியெனில் கூட்டணிக்கு அது பெரிய பலம்தானே. அதாவது நிச்சயமாக கூட்டணி உண்டு. 10.5 சதவீத இடஒதுக்கீடு பெறுவதற்கு ஒரு கடுமையான போராட்டத்தை செய்வோம். அதுக்கான அறிவிப்பு வரும் என்று மாநாட்டு மேடையில் முழங்கினோம். மேலும் காலையில் ஒருவர் என்னிடம் கூறினார். சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை என்று சொன்னார். நான் அதற்கு அவரிடம் திருப்பி சொன்னேன். சிங்கத்தின் கால்கள் பழுதுபடவே இல்லை. சீற்றம் குறையவே இல்லை, அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கின்ற அந்த சீற்றம்’ என்றார்.

* ராமதாஸ் கூட்டத்தை புறக்கணித்த எம்எல்ஏக்கள்
பாமகவில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி (பென்னாகரம்), அருள் (சேலம் மேற்கு), சதாசிவம் (மேட்டூர்), வெங்கடேஸ்வரன் (தர்மபுரி), சிவக்குமார் (மயிலம்) என 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் ஜி.கே.மணி, அருள் ஆகிய 2எம்எல்ஏக்கள் மட்டுமே நேற்று ராமதாஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். சேலத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சதாசிவம் எம்எல்ஏவிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டதற்கு பதில் ஏதும் சொல்லாமல் நழுவி விட்டார். வெங்கடேஸ்வரன் எம்எல்ஏவிடம் கேட்டபோது, ‘குடும்ப நிகழ்ச்சி இருந்ததால் கூட்டத்தில் பங்கேற்கவில்ைல’ என்று பதில் அளித்தார்.

* நள்ளிரவில் அன்புமணி போட்ட ஒரு போன்… வீட்டிற்கு திரும்பி சென்ற நிர்வாகிகள்
தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை ராமதாஸ் நேற்று நடத்துவதாக அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தென் மாவட்டத் தலைவர்களும், செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவு தைலாபுரத்திற்கு கிளம்பினர். ஆனால் அவர்களுடன் செல்போனில் தொடர்புகொண்ட அன்புமணி, தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார். அதில், ‘‘இந்த ஆலோசனை கூட்டத்திற்கு எனக்கே முறைப்படி அழைப்பு வரவில்லை. எனவே, இந்த கூட்டத்தில் நீங்கள் யாரும் பங்கேற்கக் கூடாது.

பாதுகாப்பாக வீட்டிற்கு திரும்பி செல்லுங்கள். முறையான கூட்டத்திற்கு பின்னர் அழைப்பு விடுக்கப்படும். அப்போது வந்து கலந்து கொண்டால் போதும். இன்றைய கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம். ஒருதலைபட்சமாக நடக்கும் கூட்டத்தை நாம் புறக்கணிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் நமது பலம் தெரிய வரும். எனவே, கூட்டத்திற்கு வரவேண்டாம். திரும்பி செல்லுங்கள்’’ என கூறியுள்ளார். இதைக் கேட்ட மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பாதிவழியில் பயணத்தை ரத்து செய்து, தங்களது ஊருக்கு நள்ளிரவே திரும்பியுள்ளனர்.

* அன்புமணிக்கு வேறு வேலை இல்லையா? வடிவேல் ராவணன் மழுப்பல்
தைலாபுரம் தோட்டத்தில் கூட்டம் முடிந்து வெளியே வந்த பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனிடம், ‘தேர்தல் வெற்றிக்காக பாடுபட வேண்டுமென ராமதாஸ் கூறி உள்ளார். பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் வரவில்லையே’ என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘அதெல்லாம் உங்களுக்கு கணக்கு என்ன தெரியும்?. எல்லோரும் வந்து விட்டனர்’ என்றார். செயல் தலைவர் அன்புமணி கலந்து கொள்ளவில்லையே? என கேட்டதும் பதற்றம் அடைந்த அவர், ‘அவருக்கு வேற வேலையே இல்லையா’ என்று மழுப்பலாக கூறினார்.

பின்னர் எல்லோருக்கும் வேலை கொடுத்தாச்சு. அனைவரும் வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். நீங்கள் குண்டக்க.. மண்டக்க கேள்வி கேட்டீர்கள் என்றால்… எனக்கூறி சிரித்தார். பின்னர் 50 தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தியதாக கூறியதையே மீண்டும் மீண்டும் தெரிவித்தார். 3 எம்எல்ஏக்கள் வரவில்லையே என கேட்டபோது, வரல, போகல என்பதை நாங்கள்தான் சொல்லணும். இத்தனைபேர் வந்தாங்க… இத்தனைபேர் போனாங்க… என்பதை நாங்கள்தான் சொல்லணும். எல்லோரும் வந்துட்டாங்க என்றார். இன்றைய கூட்டத்தில் எத்தனை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என்று கேட்டதற்கு, கோபமடைந்த அவர் ஒரே ஒரு தீர்மானம் தான் எனக் கூறி புறப்பட்டார்

The post தந்தை, மகன் மோதல் முற்றுகிறது ராமதாஸ் கூட்டத்தை புறக்கணித்தார் அன்புமணி: 159 மாவட்ட செயலாளர்கள், தலைவர்களும் வரவில்லை appeared first on Dinakaran.

Related Stories: