சேந்தமங்கலம், ஆக. 3: கொல்லிமலையில் போதிய மழை இல்லாததால் அருவிகள் வறண்டு போனது. இதனால் வெளியூர்களின் இருந்து குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வந்து செல்கின்றனர். கொல்லிமலையில் எல் நினோ பாதிப்பால் மிகவும் கடுமையான வெப்பம் இருந்து வருகிறது.காலையில் மட்டும் சில்லென்று குளிர் காற்று வீசுகிறது. காலையில் மலைப்பாதையில் மேக மூட்டம் மலைகளில் தவழ்ந்து செல்லும் காட்சி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.
ஆடிப்பெருக்கு முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நேற்று கொல்லிமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். வல்வில் ஓரிவிழா நடைபெறுவதால் சேலம், கரூர், சென்னை, புதுச்சேரி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் டூவீலர் மற்றும் கார்களில் வந்திருந்தனர். போதிய மழை இல்லாததால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, சினி பால்ஸ், நம் அருவிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய்விட்டது. இதனால் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாததால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சிமுனையம் உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை அழகை சுற்றி பார்த்துவிட்டு குறைவாக தண்ணீர் உள்ள வாசலூர்பட்டி ஏரியில் குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் படகு சவாரி செய்தனர்.
மாலை வீடு திரும்பும்போது சோளக்காடு, தெம்பளம், திண்டு பகுதிகளில் உள்ள பழச்சந்தையில் அன்னாசி, பலா, மலை வாழை, கொய்யா, கமலா ஆரஞ்சு, தேன், மிளகு கொல்லிமலை விளைபொருட்களை வாங்கிச்சென்றனர். இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொல்லிமலைக்கு வருவார்கள். அருவிகளின் தண்ணீர் இல்லாததால் குளிக்க முடியாமல் வெறும் ஏமாற்றத்துடன் இங்கு செல்வார்கள்.
