பரமத்திவேலுார், ஆக. 3: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுார் அருகே பொத்தனூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து, போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக, பரமத்திவேலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ சாந்தகுமார் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பொத்தனூர் காவிரி கரையோரம் சுடுகாட்டு பகுதியில் சந்தேகத்துக்து இடமாக நின்றிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி விற்ற பொத்தனூரைச் சேர்ந்த முத்துசாமி மகன் கோகுல் (22) என்பது தெரியவந்தது.
இவரை கடந்த ஜூலை 5ம் தேதி கைது செய்த போலீசார், 10 போதை மாத்திரைகள், மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது கஞ்சா, போதை ஊசி, போதை மாத்திரை உட்பட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, நாமக்கல் மாவட்ட எஸ்பி யாதவ் கிரிஷ் அசோக் பரிந்துரையின் படி, கலெக்டர் மதுபாலன், கோகுலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதற்கான நகலை, சேலம் மத்திய சிறையில் உள்ள கோகுலிடம் போலீசார் வழங்கினர்.
