×

புலிகள் காப்பகம் பெயரில் மேகமலை விவசாயிகள் வெளியேற்றமா.? அச்சத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் 98 மலைக் கிராம மக்கள்

புலிகள் காப்பகம் என்ற பெயரில் மேகமலை விவசாயிகளை வன ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி வெளியேற்ற சொல்லும் உச்சநீதிமன்ற உத்தரவால் 98 மலைக் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தேனி மாவட்டத்தின் கடமலைக்குண்டு–மயிலாடும்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட மேகமலை, தம்மம்பட்டி உள்ளிட்ட எட்டு ஊராட்சிகளில் 98 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு ஐந்து தலைமுறைகளுக்கும் மேலாக சுமார் 25 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இப்பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர்–மேகமலை புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், மலைவாழ் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் கவலையில் ஆழ்ந்துள்ள மலைக் கிராம மக்கள், “நிலம், வீடு என அனைத்தையும் விட்டுவிட்டு இனி எங்கே செல்வது?” என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒரு கிராமவாசி கூறுகையில், “இங்கு பள்ளிக்கூடம் இருக்கிறது, சாலை இருக்கிறது, குடிநீர் வசதி இருக்கிறது. அரசு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறது. இப்போது அவற்றையெல்லாம் விட்டுவிட்டு வெளியேறச் சொன்னால், நாங்கள் எங்கே செல்வோம்? எப்படிப் பிழைப்போம்?” என்றார்.

மற்றொருவர் கூறுகையில், “எங்கள் முன்னோர்கள் காலத்திலிருந்தே இங்கு வாழ்ந்து வருகிறோம். கிழங்கு தோண்டி வாழ்ந்தோம். பின்னர் தோட்டங்களிலும், மில்களிலும் வேலை செய்து குடும்பத்தை நடத்தினோம். வெளியே சென்றால் மாத வாடகை, குழந்தைகளின் கல்விச் செலவு ஆகியவற்றை எப்படி சமாளிப்பது? இங்கு கடை வைத்திருக்கிறோம். அதற்காக வாங்கிய கடன்களை யார் அடைப்பார்கள்? எங்களின் நிலைமை குறித்து யாரும் சிந்திக்காமல் ஊரை விட்டு வெளியேறுங்கள் என்று கூறுகின்றனர்” என்று வேதனை தெரிவித்தார்.

மேலும், வனத்துறையினர் தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சிப்பதாகவும், தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதாகவும் மேகமலை மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

“எங்களின் வாழ்க்கை முழுவதும் இந்த மலைகளோடுதான் இணைந்துள்ளது. ஆடு, மாடு வளர்த்து, விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறோம். வெளியே சென்றால் எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லை. எனவே, எங்களுக்கு நிரந்தர குடியுரிமையுடன் பட்டா வழங்க வேண்டும்,” என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், “மின்சாரத் துறையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கப் போவதாகவும், இங்கு வாழக் கூடாது என்று எச்சரிப்பதாகவும் கூறுகின்றனர். இலங்கைத் தமிழர்கள் வெளியேற்றப்பட்டதுபோல் எங்களையும் வெளியேறுமாறு வனத்துறையினர் தொடர்ந்து தொந்தரவு செய்கின்றனர். எனவே, தற்போதைய அரசு இந்த விவகாரத்தை பரிசீலித்து, இதே பகுதியில் நாங்கள் தொடர்ந்து வாழ வழிவகை செய்ய வேண்டும்,” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 2006-ஆம் ஆண்டு வன உரிமைகள் சட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Meghamalai ,Supreme Court ,Dhammampatti ,Kadamalaikundu-Mayiladumparai ,Theni district ,
× RELATED ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு