காஞ்சிபுரம் ஜூலை 30: காஞ்சிபுரத்தில் செயல்படும் 3 மதுபான தொழிற்சாலைகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டதால், பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே நத்தாநல்லூர், இளையனார் வேலூர் மற்றும் மேவலூர்குப்பம் பகுதிகளில் மதுபான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், நத்தாநல்லூர் மற்றும் இளையனார் வேலூர் மதுபான தொழிற்சாலைகள், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சனுக்கு சொந்தமானவை.
இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் இந்த 3 மதுபான தொழிற்சாலைகளிலும், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். கடந்த மாதம் மேவலூர்குப்பத்தில் செயல்படும் மதுபான தொழிற்சாலையில் அமைச்சர் உற்பத்தி மற்றும் பல்வேறு நிலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
