திருப்போரூர், ஆக.4: சென்னை வொண்டர்லா கேளிக்கை மையத்தில் 150 அடி உயரத்தில் பழுதாகி நின்ற ராட்டினத்தில் இருந்து அந்தரத்தில் தொங்கிய 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். திருப்போரூர் அடுத்துள்ள இள்ளலூரில் வொண்டர்லா எனப்படும் கேளிக்கைப் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகள், பெண்கள், இளைஞர்களுக்கென பல்வேறு வகையான விளையாட்டுகள் உள்ளன. தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கேளிக்கை மையத்திற்கு வருகை தருகின்றனர். சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களிலும், மற்ற விடுமுறை தினங்களிலும் இன்னும் அதிகமான பேர் வருகை தருகின்றனர். இந்நிலையில், கடந்த 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், சுமார் 2 ஆயிரம் பேர் வந்திருந்தனர். அங்கிருந்த உயரமான விளையாட்டு ராட்டினங்களுள் ஒன்றான ஸ்பின் மில் என்ற ராட்டினத்தில் பொதுமக்கள் விளையாட அமர்ந்தனர். ஒரே நேரத்தில் 24 பேர் அமரும் வகையில் இந்த ராட்டினம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் அமர்ந்து 150 அடி உயரத்தை தாண்டி சென்றபோது திடீரென தொழில் நுட்பக்கோளாறு ஏற்பட்டு ராட்டினம் அந்தரத்திலேயே நின்றது. இதனால், அதில் இருந்தவர்கள் பயந்துபோய் கூச்சல் போட்டனர். இதையடுத்து கீழே இருந்த அந்த ராட்டினத்தை இயக்குபவர்கள் பலமுறை முயன்றும் ராட்டினத்தை கீழே இறக்க முடியவில்லை. இதையடுத்து நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதற்கான டெக்னீஷியன் வரவழைக்கப்பட்டார். அவர் அந்த ராட்டினத்தின் நடுப்பகுதி வழியாக கயிறு மூலம் மேலே ஏறினார். நிர்வாகத்தின் தரப்பில் மைக் மூலம் பொதுமக்கள் பயப்படாமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. சுமார் 1.30 மணி நேர பழுது பார்ப்புக்கு பிறகு ராட்டினம் கீழே இறக்கப்பட்டது. இதையடுத்து ராட்டினத்தில் சிக்கியவர்கள், அனைவரும் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
