காஞ்சிபுரம், ஆக.4: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 438 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் சினேகா அரசுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் சினேகா தலைமையில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, மின்சாரத் துறை, குடிநீர் வசதி, நகராட்சி நிர்வாகங்கள், பேரூராட்சித் துறை, கூட்டுறவு சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கிராம பொதுப் பிரச்னைகள், வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் என மொத்தம் 438 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சினேகா அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர், அம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மனு நிராகரிப்பிற்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட கனிமவள அறக்கட்டளையின் சார்பில் 9 சிறப்புப்பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்த ரூ.6,32,412 மதிப்பிலான கற்பித்தல், கற்றல் பொருட்களை, மாவட்ட கலெக்டர் சினேகா, சிறப்பு பள்ளிகளின் தாளாளர், தலைமை ஆசிரியர்களிடம் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவ்யஸ்ரீ, கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி), மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆஷிக் அலி, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர்(பொ) பாலகிருஷ்ணன், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) விஜயலட்சுமி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
