×

பரோட்டா தராததால் தகராறு; கீழே தள்ளிவிட்டு வாலிபர் கொலை: ஓட்டல் உரிமையாளர் கைது

 

திருப்போரூர், ஆக. 3: கேளம்பாக்கத்தில் பரோட்டா தராததால் ஏற்பட்ட தகராறில் கீழே தள்ளிவிட்டு வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதில் ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். கேளம்பாக்கம் மார்க்கெட் சாலையில் குப்பாண்டி என்பவருக்குச் சொந்தமான ஓட்டல் ஒன்று உள்ளது. இங்கு கடந்த மாதம் 28ம் தேதி இரவு தையூர் பெரிய பில்லேரி கிராமத்தைச் சேர்ந்த நாகூரான் மகன் கிருபாகரன் (30) என்பவர் குடிபோதையில் வந்து பரோட்டா மற்றும் குருமா கேட்டதாக தெரிகிறது. இவர் பலமுறை உணவு வாங்கி கடன் வைத்து விட்டதாக கூறி ஓட்டல் உரிமையாளர் குப்பாண்டி, கிருபாகரனுடன் வாய்த்தகராறில் ஈடுபட்டார்.

இதில் ஏற்பட்ட கைகலப்பில் கிருபாகரனை குப்பாண்டி தள்ளி விட்டுள்ளார். இதில் கிருபாகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கிருபாகரனை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து மருத்துவமனை கொடுத்த தகவலின் பேரில் கேளம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஓட்டல் உரிமையாளர் குப்பாண்டி (43) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருபாகரன் நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபாகரனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruporur ,Kelambakkam ,Kuppandi ,Kelambakkam Market Road ,
× RELATED காஞ்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த...