×

கஞ்சா விற்ற கல்லூரி மாணவன் உள்பட 5 பேர் பிடிபட்டனர்: 7 கிலோ பறிமுதல்

 

பல்லாவரம், ஜூலை 30: பல்லாவரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவன் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார், 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை செல்லும் பிரதான சாலையில் நாகல்கேணி அருகே ஒரு கும்பல் சட்டவிரோதமாக கஞ்சா விற்பதாக சங்கர்நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது 5 பேர் கும்பல் ஒன்று அவ்வழியாக செல்லும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. துரிதமாக செயல்பட்ட போலீசார், அந்த நபர்களை மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று முறைப்படி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் குரோம்பேட்டையை சேர்ந்த அமீர் (28), சிவமணி (22), பால்ராஜ் (30), அபிஷேக் (21), முகமது ஆயுப் கான் (24) என்பதும், இதில் அபிஷேக் என்ற வாலிபர் சேலையூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ 3ம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருவதும், மற்றவர்கள் அனைவரும் பெயின்டர், இன்ஜினியர், மார்க்கெட்டிங் என்று நல்ல வேலை பார்த்து வருவதும் தெரிந்தது. இவர்கள் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில், ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை விலைக்கு வாங்கி வந்து, அதனை சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கைதான 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Pallavaram ,Nagalkeni ,Thirunirmalai… ,
× RELATED 3 மதுபான தொழிற்சாலைகளில் லஞ்ச...