பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 24 ஆண்டு கடுங்காவல்

பாலக்காடு : பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 24 ஆண்டுகள் 3 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்து பாலக்காடு போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாலக்காடு மாவட்டம், எருத்தேன்பதி அருகே மாங்காப்பள்ளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் செல்லமுத்து (62). இவர், கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம்தேதி பக்கத்து வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து அங்கு தனியாக இருந்த 7 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு, பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொழிஞ்சாம்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன்பேரில் எஸ்.ஐ. ஷிஜூ தலைமையில் போலீசார் செல்லமுத்து மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, பாலக்காடு மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சிந்து தங்கம், முதியவர் செல்லமுத்துவிற்கு 24 ஆண்டு 3 மாதம் கடுங்காவல் தண்டனையும், ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும், அரசு தரப்பில் நிதியுதவி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் ரமிகா ஆஜரானார்.

Related Stories: