ராணிப்பேட்டை: ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தவெக செயலாளரை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட இளம்பெண் வலியுறுத்தி உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் 34 வயது இளம்பெண். இவர் கடந்த 23ம் தேதி ஆற்காடு டவுன் போலீசில் புகார் அளித்தார். மேலும் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, டிஜிபி அலுவலகம், எஸ்பி அலுவலகம் ஆகியவற்றுக்கும் புகார் மனுவை அனுப்பி இருந்தார். அந்த மனுவில், கட்சியில் பதவி தருவதாக, தன்னை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட தவெக செயலாளர் விஜய்மோகன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் பேரில் சிப்காட் இன்ஸ்பெக்டர் மங்கையர் கரசி ஆற்காடு நகர காவல் நிலையம் வந்து இளம்பெண்ணிடம் விசாரணை செய்தனர். அதனடிப்படையில் மாவட்ட தவெக செயலாளர் விஜய்மோகன் மற்றும் ஜான்பிரிட்டோ ஆகிய இருவர் மீதும் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் வழக்குப்பதிவு செய்தும் 2பேரையும் கைது செய்யாமல் உள்ளதால், பாதிக்கப்பட்ட பெண் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிராவை நேற்று எம்எல்ஏ அலுவலகத்தில் சந்தித்து முறையிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, ராணிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் எம்எல்ஏ அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அப்போது இளம்பெண், உரிய நடவடிக்கை எடுத்து 2பேரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் முறையிட்டார்.
