தென்காசி: திருமணமான 5 மாதத்தில் மனைவியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு கணவன் நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மங்கம்மா சாலை சாஸ்தா கோவில் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சக்தி வீரமணிகண்டன் (32). இருசக்கர வாகன மெக்கானிக் ஒர்க் ஷாப் நடத்தி வரும் இவருக்கும், ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளையை சேர்ந்த அன்னலட்சுமி (24) என்பவருக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான ஒரு வாரத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தொடர்ந்து பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று (ஜூலை 27) அதிகாலை 1.30 மணியளவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சக்தி வீரமணிகண்டன் வீட்டில் மேல் அறையில் வைத்து அன்னலட்சுமியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இதனை தொடர்ந்து தென்காசி போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று அன்னலட்சுமி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆன 5 மாதத்தில் மனைவியை கணவன் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
