சென்னை–செய்யாறு இடையே 4 வழிச்சாலை டெண்டர் ரத்து செய்தது தவெக அரசு

சென்னை: சென்னையுடன், செய்யாறு தொழிற்தட பகுதியை இணைக்கும் வகையில், 43 கிமீக்கு நான்கு வழி சாலை அமைப்பதற்காக கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டரை ரத்து செய்தது தவெக அரசு.சிங்கபெருமாள் கோவிலில் இருந்து செய்யாறு சிப்காட் வரை சாலை அமைக்க கடந்த மார்ச் மாதம் டெண்டர் கோரப்பட்டது.

சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சிப்காட், சிட்கோ உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள திருவண்ணாமலை மாவட்டத்திலும் தொழில் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், செய்யாறு சிப்காட் வளாகத்தைச் சுற்றிய பகுதிகளிலும் புதிய தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன. இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சென்னையில் இருந்து செய்யாறு சிப்காட் பகுதிக்கு கனரக வாகனங்கள் எளிதாகச் செல்ல போதிய அகலமான சாலை வசதி இல்லாததால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

தற்போது சென்னை துறைமுகம், தென் சென்னை, ஒரகடம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதிகளில் இருந்து செய்யாறு நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாகவே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. காஞ்சிபுரம் நகரம், தூசி, மாமண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் குறுகலாக இருப்பதுடன், கடும் போக்குவரத்து நெரிசலும் நிலவுவதால் பயணம் தாமதமாகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, சென்னை மற்றும் செய்யாறு தொழிற்பகுதியை நேரடியாக இணைக்கும் வகையில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தச் சாலை, சிங்கப்பெருமாள் கோவில் – ஒரகடம் நெடுஞ்சாலையில் இருந்து தொடங்கி, செய்யாறு சிப்காட் வரை சுமார் 43.2 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக 33 கிராமங்களில் மொத்தம் 619 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, 60 மீட்டர் அகலத்தில் நவீன நான்கு வழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டிருந்தது. இந்த சாலை அமைந்தால், கனரக வாகன போக்குவரத்து எளிதாகி, தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கும் முக்கிய ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சென்னை–செய்யாறு சிப்காட் பகுதியை இணைக்க, 43 கிமீக்கு நான்கு வழி சாலை அமைப்பதற்காக போடப்பட்ட டெண்டரை ரத்து செய்தது தவெக அரசு. மேலும் நிர்வாக காரணங்களுக்காக டெண்டர் ரத்து என விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: