ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு

குமாமோட்டோ: தெற்கு ஜப்பானின் கியூஷு தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ பகுதியில் இன்று 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

குமாமோடோ, நாகசாகி, ககோஷிமா, ஃபுகுஓகா, சாகா, ஒய்டா, மியாசகி உள்ளிட்ட ஜப்பான் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேற்கண்ட மாகாணங்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியிலுள்ள முக்கிய தீவான கியூஷுவில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதியானது, கடலில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடல் அலைகள் 1 மீட்டர் அல்லது 3.28 அடி உயரத்துக்கு எழுமென்றும், கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே கியூஷு தீவை ஒட்டிய சில பகுதிகளில் ஏற்கனவே சுனாமி அலைகள் எழ தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை உடனடி உயிரிழப்புகளோ அல்லது மிக மோசமான சேதங்களோ ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை.

Related Stories: