டெல்லி: பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) திருத்த மசோதா, 2026 மீதான விவாதத்தின் போது மக்களவையில் பேசிய ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, மாணவர் போராட்டத்திற்குச் செவிசாய்த்து அரசு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவைக் கொண்டுவருவது சிறந்ததா, அல்லது போராட்டத்தை ஒடுக்க நாடு தழுவிய அவசரநிலையை ஒரு அரசு அமல்படுத்துவது சிறந்ததா என்று எதிர்கட்சியினரை பார்த்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு எதிர்வினையாற்றிய சமாஜ்வாதி கட்சி எம்.பி. அகிலேஷ் யாதவ், நான் எமர்ஜென்சி காலத்தை நேரில் பார்த்ததில்லை, ஆனால் அப்போது நடந்த நிகழ்வுகளின் எதிரொலிகளை இங்கேயே, நாட்டின் தலைநகரில் சில நாட்களுக்கு முன் பார்த்தேன். பிரச்சனை சட்டத்தைப் பற்றியது அல்ல, உங்கள் நோக்கங்கள் நேர்மையானவை அல்ல.
எப்போது உங்கள் நோக்கங்கள் நேர்மையானவையாக மாறுகிறதோ அந்த தருணத்தில், தேர்வு நடைமுறையும் நேர்மையானதாகி விடும் என்று பதிலடி கொடுத்தார். கோயில் காணிக்கை திருட்டைத் தடுக்க தவறிய உங்களால் எப்படி வினாத்தாள் கசிவை தடுக்க முடியும்?… ஏற்கனவே உள்ள சட்டத்தில் ஒரு திருத்தத்தை மட்டுமே கொண்டு வந்துள்ளீர்கள், யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? சட்டம் பயனுள்ளதாக இருந்திருந்தால், பாஜக-வின் ஆட்சியில் 20 தேர்வுகளின் வினாத்தாள்கள் எப்படி கசிந்தன என்று கேள்வி எழுப்பினார்.
