ஸ்ரீவை. அருகே லாரி மோதி தொழிலாளி பரிதாப பலி

ஸ்ரீவைகுண்டம், ஜூலை 29:ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இசவன்குளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகன் (40). கொத்தனாரான இவர், நேற்று காலை வழக்கம்போல் பைக்கில் புளியம்பட்டிக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தார். மீனாட்சிபட்டி அருகே வரும்போது இந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறிய முருகன், கீழே விழுந்ததில் அவரது தலை மீது டிப்பர் லாரி ஏறி இறங்கியது. இதில் முருகன், சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி இறந்தார். தகவலறிந்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகன் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: