முதல்வரின் கடிதத்தை காட்டி ரூ.1000 வசூல்; வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக தவெக நிர்வாகி நூதன மோசடி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் புகார்

வேலூர், ஜூலை 29: முதல்வரின் கடிதத்தை காட்டி ரூ.1000 வசூலித்து வீட்டுமனை பட்டா வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த தவெக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி வேலூர் எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்தார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அகரம் பகுதியை சேர்ந்த 29 வயது இளம்பெண் ஒருவர் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.

அந்த மனுவில், ‘எங்கள் ஊரைச் சேர்ந்த தவெக நிர்வாகி ஒருவர் உங்களிடம் உள்ள ஆதார் கார்டு, குடும்ப அட்டையை என்னிடம் கொடுத்தால் உங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வழங்குவேன். அகரம் கிராமத்தில் உள்ள 712ஏ சர்வே எண் என்ற நிலத்தில் சுமார் 500 நபர்களுக்கு நான் இலவச வீட்டுமனைப் பட்டா ஏற்பாடு செய்து கொண்டு உள்ளேன்.

நீங்களும் உங்கள் உறவினர்களுக்கும் தேவைப்பட்டால் ஆவணங்களுடன் ரூ.1000 கொடுங்கள் என முதல்வர் பெயருடைய கடிதத்தினை எங்களிடம் காட்டி, பலரிடம் பணம் மற்றும் ஆவணங்களை பெற்றார். ஆனால் இலவச வீட்டுமனை பட்டா கிடைக்கவில்லை. அவர் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. எனவே தவெக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மனு பெற்றுக்கொண்ட போலீசார், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

 

 

Related Stories: